அணு ஆயுத போரில் ஈடுபட மாட்டோம் என அமெரிக்கா, சீனா உள்ளிட்ட 5 நாடுகள் கூட்டறிக்கை

அணு ஆயுத போர் மற்றும் ஆயுத போட்டியில் ஈடுபட மாட்டோம் என்று அமெரிக்கா, சீனா, ரஷியா, பிரான்ஸ், இங்கிலாந்து ஆகிய 5 நாடுகளும் முதல் முறையாக கூட்டு அறிக்கையை வெளியிட்டுள்ளன.

அணு ஆயுதங்களை தயாரிப்பதில் வல்லரசு நாடுகளான அமெரிக்கா, சீனா, ரஷியா ஆகிய நாடுகள் முன்னணியில் உள்ளன. போர் ஏற்படும்போது அணு ஆயுதங்களை பயன்படுத்தக்கூடாது என்ற உலகளாவிய ஒப்பந்தங்கள் இருக்கும் பொழுதிலும், நாடுகளுக்கு இடையே போர் எழுந்தால் அணுயுதங்களை பயன்படுத்தும் சூழல் நிலவலாம் என்ற அச்சம் உள்ளது.

அணு ஆயுதங்களை சண்டையில் பயன்படுத்துவதை தடுக்கும் வழிமுறைகளை மேலும் வலுவாக்க உலக நாடுகளால் தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் அமெரிக்கா, சீனா, ரஷியா, பிரான்ஸ், இங்கிலாந்து ஆகிய 5 நாடுகள் அணு ஆயுத போர் மற்றும் ஆயுத போட்டியில் ஈடுபட மாட்டோம் என்று கூட்டு அறிக்கையை வெளியிட்டுள்ளனர்.

அதில், அணு ஆயுத போரை தவிர்ப்பதும், ஆயுத போட்டி அபாயங்களை குறைப்பதும் தங்களின் முதன்மையான பொறுப்புகளாக கருதுகிறோம் என்றும் அணு ஆயுத போரால் வெற்றி பெற முடியாது, அது ஒருபோதும் வெற்றி பெறக் கூடாது என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம் என்றும் தெரிவித்துள்ளனர்.

அணுசக்தி பயன்பாடு நீண்ட விளைவுகளை ஏற்படுத்தும் என்பதால் அணு ஆயுதங்கள் தொடர்ந்து இருக்கும் வரை தற்காப்பு நோக்கங்களுக்காக சேவை செய்ய வேண்டும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த கூட்டறிக்கை குறித்து சீனா துணை வெளியுறவுத்துறை அமைச்சர் மா ஜாக்சூன் கூறியதாவது, “இந்த அறிக்கை பரஸ்பர நம்பிக்கையை அதிகரிக்கவும், பெரும் சக்திகளுக்கு இடையேயான போட்டியை ஒருங்கிணைப்பு மற்றும் ஒத்துழைப்புடன் மாற்றவும் உதவும்” எனத் தெரிவித்தார்.