செங்கல் சூளை உற்பத்தியாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய அதிகாரிகள்

கோவையில் சட்டவிரோதமாக செயல்படும் செங்கல் சூளைகள் குறித்து தகவல் அளிக்க வேண்டும் என்று செங்கல் உற்பத்தியாளர்களிடம் அதிகாரிகள் தெரிவித்தனர்.

கோவை மாவட்டத்தில் செங்கல் சூளைகளால் நீர் வழிப்பாதைக்கும், வன விலங்குகளில் வலசை பாதைகளுக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டு வந்த நிலையில் செங்கல் சூளைகள் செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஆனால், ஒரு சில இடங்களில் சட்டவிரோதமாக செங்கல் உற்பத்தி செய்யப்படுகிறது. அவ்வப்போது அதிகாரிகள் ஆய்வு நடத்தி செங்கல் கொண்டு செல்லும் லாரிகளை பறிமுதல் செய்து வருகின்றனர்.

இதனிடையே கோவை வடக்கு கோட்டாட்சியர் ரவிச்சந்திரன் தலைமையில் செங்கல் உற்பத்தியாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் வெவ்வேறு அரசு துறை அதிகாரிகள் மற்றும் 50க்கும் மேற்பட்ட செங்கல் உற்பத்தியாளர்கள் கலந்து கொண்டனர்.

அப்போது, சட்டவிரோதமாக செயல்படும் சூளைகள் குறித்த தகவலை மாவட்ட நிர்வாகத்திடம் தெரியப்படுத்த வேண்டும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். அதற்கு, மீண்டும் செங்கல் சூளைகள் செயல்பட அனுமதி அளிக்கும்பட்சத்தில் உரிய நடைமுறைகளுடன் தொழில் நடத்துவோம் என்றும், தொழில் தடைபட்டதால் பல தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக செங்கல் உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர்.