கோவையில் முதியோர்களுக்கான டே கேர் மையம் தொடக்கம்

முதியோர்கள் இளைப்பாறி ஓய்வு எடுக்கும் வகையில் தென்னிந்திய அளவில் முதன் முறையாக கோவையில் முதியோர்களுக்கான டே கேர் மையம் துவங்கப்பட்டது.

அறுபது வயதிற்கு மேற்பட்ட முதியோர்கள், தங்களது பகல் நேரத்தை சிறு விளையாட்டு, உடற்பயிற்சி மற்றும் கலந்துரையாடல்கள் என முதியோர்கள் செலவிடும் விதமாக, புதிய முயற்சியாக தென்னிந்திய அளவில் முதன் முறையாக கோவையில் முதியோர் பகல்நேர பாதுகாப்பகம் துவங்கப்பட்டுள்ளது.

கோவை கவுண்டம்பாளையம், சீனிவாச நகர் பகுதியில் ஆதரவு எனும் பெயரில் துவங்கப்பட்டுள்ள இதற்கான துவக்க விழாவில், நந்தினி ரங்கசாமி மற்றும் கோயமுத்தூர் மாவட்ட வெல்ஃபேர் சங்க நிர்வாகிகள் டாக்டர் சண்முகசுந்தரம், பாலகிருஷ்ணன், டாக்டர் காமினி சுரேந்திரன், சைமன், மணி ஆகியோர் கலந்து கொண்டனர்.

கோவை மாவட்ட ஆட்சியரின் வழிகாட்டுதல் படி தமிழக அரசுடன் இணைந்து அமைக்கப்பட்டு உள்ள இந்த மையத்தில் முக்கிய அம்சங்களாக, முதியோர்கள் தனிமையை தவிர்த்து காலை முதல் மாலை வரை இங்கு சேர்ந்து நண்பர்களுடன் கலந்து பேசி, நேரத்தை செலவழிக்க வசதியாக நூலகங்கள், செஸ், கேரம் போன்ற விளையாட்டு வசதிகள், நடைபயிற்சி செய்ய இட வசதி, மேலும் பிறந்த நாள் கல்யாண மற்றும் பண்டிகை நாட்கள் என விசேஷ தினங்களை நண்பர்களுடன் கொண்டாடும் வகையிலும் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

தனிமையைத் தவிர்த்து தங்களது முதிய பருவத்தில் நண்பர்களுடன் நேரத்தை மகிழ்ச்சியாக செலவிடும் வகையில் அமைக்கப்பட்டுள்ள இந்த மையம் முதியோர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.