பா.ஜ.க தலைவர் ஜேபி நட்டாவுக்கு கோவையில் உற்சாக வரவேற்பு

திருப்பூரில் நடைபெறும் பல்வேறு கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்க கோவை விமான நிலையத்திற்கு வந்த பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா விற்கு கோவை மாவட்ட பாஜக வினர் 200க்கும் மேற்பட்டோர் மலர்தூவி உற்சாக வரவேற்பளித்தனர். கோவை விமான நிலையம் வந்தடைந்த அவருக்கு மலர் கிரீடம் அணிவித்து உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது.

திருப்பூர் செல்லும் அவர் அங்கு நடைபெற உள்ள மாநில செயற்குழு கூட்டம் மாவட்ட அலுவலகம் புதிய கட்டடம் திறப்பு ஆகிய நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார்.

இதற்காக டெல்லியில் இருந்து அவர் விமானம் மூலமாக கோவை வந்தடைந்தார். கோவை விமான நிலையத்தில் அவருக்கு மேள தாளங்கள் முழங்க, மலர் தூவி பாஜகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் மத்திய இணை அமைச்சர் முருகன், எம்.எல்.ஏ.,க்கள் வானதி சீனிவாசன், நயினார் நாகேந்திரன், மாநில பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி ஆகியோர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து இங்கிருந்து சாலை மார்க்கமாக அவர் திருப்பூர் சென்று மாநில செயற்குழு கூட்டத்தில் கலந்து கொள்கிறார்.