துபாயில் நடைபெறும் ஃபேஷன் ஷோ: கோவை சிறுவன் தேர்வு

துபாயில் நடைபெற உள்ள சர்வதேச ஃபேஷன் ஷோ போட்டிக்கு கோவையைச் சேர்ந்த ஆறு வயது சிறுவன் ராணா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

கோவை ராம்நகரைச் சேர்ந்த சிவக்குமார்-கோமதி தம்பதியின் மகன் ராணா (6). ஒன்றாம் வகுப்பு படித்து வருகிறார். சிவக்குமார் ஜவுளி தொழிலும், கோமதி அழகு நிலையமும் நடத்தி வருகின்றனர். ஒரு முறை கோமதியின் அழகு நிலையத்திற்கு, ஆடை வடிவமைப்பாளர் ஒருவர் வந்துள்ளார். அங்கு ராணாவைப் பார்த்த அவர், ராணா ஃபேஷன் ஷோவிற்கு தகுதியானவர் என்றும் ஏன் ஒரு முறை பேஷன் ஷோவில் பங்கேற்க முயற்சிக்கக் கூடாது என்றும் கேட்டுள்ளார்.

இதையடுத்து, கோவையில் நடைபெற்ற ஃபேஷன் ஷோ ஒன்றில் முதல் முறையாக பங்கேற்ற ராணா முதல் பரிசைத் தட்டிச் சென்றார். அப்போது ராணாவுக்கு 3 வயது. இதைத்தொடர்ந்து, சென்னை, கோவை, சேலம், பெங்களூரு, கோவா உள்ளிட்ட இடங்களில் நடைபெற்ற ஜூனியர் ஃபேஷன் ஷோக்களில் ராணா பங்கேற்று பரிசுகளை குவித்தார். மாநில மற்றும் தேசிய அளவிலான போட்டிகளில் இதுவரை 13-க்கும் மேற்பட்ட பதக்கங்களும், விருதுகளும் பெற்றுள்ளார்.

இந்நிலையில், துபாயில் நடைபெற உள்ள சர்வதேச ஃபேஷன் ஷோ போட்டியில் ராணா முதல்முறையாக பங்கேற்க உள்ளார். வரும் 23-ம் தேதி நடைபெறவுள்ள இப்போட்டி தொடர்ந்து 4 நாட்கள் நடைபெறவுள்ளது. இதில், 15 நாடுகளை சேர்ந்த ஜூனியர் மாடல்கள் கலந்துக் கொள்ள உள்ளனர். முதற்கட்ட தேர்வு ஆன்லைனில் நடைபெற்ற நிலையில், சர்வதேச போட்டி நேரடியாக துபாயில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து ராணாவின் தாய் கோமதி கூறுகையில், ” ராணா மூன்று வயதில் இருந்தே மாடலிங் செய்து வருகிறார். மாடலிங் மட்டும் இல்லாமல், விளம்பரம் மற்றும் குறும்படங்களிலும் நடித்துள்ளார். பல ஃபேஷன் ஷோக்களை வீடியோவாகவும், நேரடியாகவும் பார்த்து தன்னைத்தானே செதுக்கிக் கொண்டார் ” என்றார்.

மேலும், சிறுவன் ராணா கூறுகையில் “தனக்கு மாடலிங் செய்வது மிகவும் பிடிக்கும். எதிர்காலத்தில் கடற்படை அதிகாரியாக வேண்டும் என்பது என் ஆசை” என்றும் தெரிவித்துள்ளார்.