குரலற்றவர்களுக்கு குரல் கொடுப்பது யார்?

சமூக நீதி, இடஒதுக்கீடு என்ற வார்த்தை அதிகம் உச்சரிக்கப்படும் மாநிலம் தமிழகம் தான். சமூக நீதி, இடஒதுக்கீடு ஆகியவற்றுக்கு தமிழகம் எப்போதும் முன்மாதிரி மாநிலமாகவே இருந்து வருகிறது. இங்குள்ள பிராதன திராவிடக் கட்சிகளான அதிமுக, திமுக ஆகியவை சமூகநீதி, இடஒதுக்கீடுக்கு தாங்கள் தான் பிரதான காவலன் என்பதை மையமாக வைத்து தான் அரசியல் வியூகங்கள், நகர்வுகளை எப்போதும் செய்து வருகின்றன.

இந்தியாவில் வேறு மாநிலத்தில் இல்லாத அளவுக்கு தமிழகத்தில் தான் 69 சதவீத இடஒதுக்கீடு இருந்து வருகிறது. 69 சதவீத இடஒதுக்கீடுக்கு உச்ச நீதிமன்றம் வரை சென்று சட்ட ரீதியாக பாதுகாப்பை ஏற்படுத்திக் கொடுத்தவர் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா என்பதை யாராலும் மறுக்க இயலாது. ஜவஹர்லால் நேரு பிரதமராக இருந்தபோது நாட்டிலேயே இடஒதுக்கீட்டுக்கான முதல் சட்டத் திருத்தத்துக்கான குரல் தமிழகத்தில் இருந்து தான் ஓங்கி ஒலித்தது.

முதல் சட்டத்திருத்தம்:

1951 பேரவைத் தேர்தலுக்கு முன்பு பெரியார் மற்றும் திமுக தலைவர்களான அண்ணா, கருணாநிதி உள்ளிட்டோர் குரல் கொடுத்தாலும், பிரதமர் நேருவிடம் தனக்கு இருந்த மிக நெருங்கிய தொடர்பை பயன்படுத்தி இடஒதுக்கீட்டுக்கான முதல் சட்டத்திருத்தத்துக்கு மூலவராக இருந்தவர் அப்போதைய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவரான காமராஜர் என்பதே உண்மை.

மேலும், 1963ல் முதல்வர் பதவியைவிட்டு விலகுவதற்கு முன்பு  இந்து நாடார்களை, உயர் வகுப்பில் இருந்து பிற்பட்டோர் வகுப்புக்கு கொண்டுவந்தார் காமராஜர். காமராஜருக்கு அடுத்து முதல்வராக இருந்த அண்ணா காலத்தில் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பிற்பட்டோர் பட்டியலை திருத்த முன்னெடுப்புகள் நடத்தப்படவில்லை. பின்னர் முதல்வராக வந்த கருணாநிதி, 1973ல் தாழ்த்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டை 2 சதவீதம் (16-இல் இருந்து 18 சதவீதமாக) உயர்த்தியும், பிற்பட்டோர் பட்டியலுக்கான இடஒதுக்கீட்டை 6 சதவீதம் உயர்த்தியும் நடவடிக்கை எடுத்தார். மேலும், கொங்கு வேளாளர் கவுண்டர்களை உயர் வகுப்பில் இருந்து பிற்பட்டோர் வகுப்புக்குக் கொண்டுவந்தார்.

திருச்செந்தூர் தொகுதி இடைத்தேர்தலின்போது வெற்றிபெறுவதற்காக 15 சதவீத கிறிஸ்தவ நாடார்களின் ஆதரவை பெற ஒட்டுமொத்த கிறிஸ்தவ நாடார்களையும் பிற்பட்டோர் பட்டியலுக்கு கொண்டுவந்தார் எம்ஜிஆர்.

அழுகிய மாங்கனி:

1980 காலகட்டங்களில் வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு கோரி மிகப்பெரிய அளவிலான போராட்டங்களை மருத்துவர் ராமதாஸ் நடத்தி வந்தார். 1989ல் ஆட்சிக்கு வந்த கருணாநிதி, பிற்பட்டோர் பட்டியலை பிரித்து வன்னியர்கள், இசை வேளாளர், பரதர்கள் (மீனவர்), பர்தவராஜ குல மீனவர், வண்ணார், நாவிதர், குயவர், ஒட்டர் , போயர், குரும்பக்கவுண்டர், சீர்மரபினர்களான கள்ளர், பிரமலை கள்ளர், கொண்டையங்கோட்டை மறவர், செம்பரத்து மறவர், வலையர்கள், அம்பலக்காரர், வேட்டுவ கவுண்டர், தொட்டிய நாயக்கர், ஊராளி கவுண்டர் உள்பட 108 சாதிகளை மிகவும் பிற்பட்டோர் தொகுப்பை (எம்.பி.சி.) உருவாக்கினார்.

அப்போது பேரவையில் பேசிய கருணாநிதி, 50 சதவீதமாக இருந்த பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு ஒதுக்கீட்டில் 3 முதல் 4 சதவீத இடங்களைப் பெற்று வரும் வன்னியர்களுக்கு இனிமேல் 6 முதல் 7 சதவீத வாய்ப்பு கிடைக்கும் என்றார். ஆனாலும், திருப்தி அடையாத ராமதாஸ், முழு மாங்கனி கேட்ட எங்களுக்கு அழுகிய மாங்கனியை கொடுத்துவிட்டார் கருணாநிதி என விமர்சனம் செய்தார்.

ராமதாஸ் கோரிக்கை:

தொடர்ந்து வன்னியர்களுக்கு 20 சதவீத ஒதுக்கீடு கோரிக்கையை அடுத்தடுத்து வந்த அதிமுக, திமுக அரசுகளிடம் வைத்துக்கொண்டே இருந்தார். இந்நிலையில், கடந்த டிசம்பரில் இதே கோரிக்கையை வைத்து மீண்டும் போராட்ட அஸ்திரத்தை எடுத்தார் ராமதாஸ்.

தேர்தல் நேரத்தில் எழுந்த இக்கோரிக்கையை நிறைவேற்ற சாதிவாரி கணக்கெடுப்புக்காக நீதிபதி குலசேகரன் குழுவை முதல்வர் எடப்பாடி பழனிசாமி நியமித்தார். இக்குழுவின் அறிக்கை வர 6 மாத காலம் ஆகும் நிலையில், தேர்தலுக்கு முன்பாக வன்னியர்களுக்கு 12 சதவீத உள்ஒதுக்கீடாவது வழங்க வேண்டும் என்று தனது நிபந்தனையை தளர்த்தினார்.

ராமதாஸின் கோரிக்கையை முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடைசி நேரத்தில் ஏற்றுக்கொண்டு வன்னியர்களுக்கு மட்டுமின்றி பிற எம்.பி.சி. பிரிவினரும் பயனடையும் வகையில் எம்.பி.சி. தொகுப்பை மூன்றாகப் பிரித்து அதற்கான மசோதாவை பேரவையில் நிறைவேற்றினார்.

அதன்படி, வன்னியர், வன்னியா, வன்னிய கவுண்டர், கவுண்டர், படையாச்சி, பள்ளி, அக்னிகுல சத்திரியர் என 7 உள்பிரிவுகளை அடக்கிய வன்னியர்குல சத்திரியர் சமூகத்துக்கு 10.5 சதவீத இடஒதுக்கீடு கிடைக்கும் வகையில் ஒரு தொகுப்பும்,  அம்பலக்காரர், பிரமலை கள்ளர், மறவர், சேர்வை, செம்பநாட்டு மறவர், ஊராளி கவுண்டர், வலையர், வேட்டுவ கவுண்டர்,  மீனவர் உள்பட 68 சீர்மரபினர் மற்றும் தொட்டிய நாயக்கர், வண்ணார், ஒட்டர், வலையர், போயர் உள்பட 25 எம்.பி.சி. பிரிவினர் ஆகியோருக்கு 7 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. இதைத் தவிர மேலும் 22 எம்.பி.சி. பிரிவினரை தனியாகப் பிரித்து 2.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. சாதிவாரியான கணக்கெடுப்பு வரை, இது அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டது.

நீதிமன்றத் தடை:

எம்.பி.சி. தொகுப்பு பிரிக்கப்பட்ட விவகாரம் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு தனிப்பட்ட முறையில் வெற்றி என்ற வகையிலும்,  ராமதாசுக்கு ஓரளவு வெற்றி என்ற வகையில் அமைந்தது.  எடப்பாடி தொகுதியில் மக்களவைத் தேர்தலின்போது அதிமுக 8,000 வாக்குகள் திமுகவைவிட பின்தங்கியிருந்த நிலையில்,  வன்னியர் இடஒதுக்கீடு காரணமாக எடப்பாடி பழனிசாமி சுமார் ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். ஆனால், வடதமிழகம் முழுவதும் இது அதிமுகவுக்கு எதிராக வன்னியர் தவிர்த்த பிற சாதியினரை திருப்பி விட்டது.

குரல்வளை நெரிக்கப்பட்ட சமூகங்கள்:

எம்பிசி தொகுப்பை மூன்றாக பிரித்தது தமிழக அரசியல் வரலாற்றில் சமூகநீதிக்கான மற்றொரு மைல்கல் என்பது மறுக்க முடியாத உண்மை. ஆனால், 7 சதவீத தொகுப்புக்குள் இருக்கும் சீர்மரபினர்களையும், அரசியல் ரீதியாக குரல் கொடுக்க ஆதரவு இல்லாத வலையர், வண்ணார்,  ஒட்டர், போயர், தொட்டிய நாயக்கர்,  மீனவர் போன்றவர்களையும் இந்த 7 சதவீத தொகுப்புக்குள் அடக்கியதால் அவர்களுக்கு மிகுந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இப்போது வன்னியர் இடஒதுக்கீடுக்கு உயர் நீதிமன்றத்தில் மதுரை கிளை தடை விதித்துள்ள நிலையில்,  இதை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது.  இருப்பினும்,  குரலற்ற சமூகங்களான வலையர், வண்ணார்,  ஒட்டர், போயர்,  தொட்டிய நாயக்கர் போன்ற சமூகங்களை 7ல் இருந்து 3 சதவீதம் தனியாகப் பிரித்து வழங்கும்போது தான் சரியான சமூக நீதியாக இருக்கும்.  அதற்கான நடவடிக்கையில் முதல்வர் ஸ்டாலின் ஈடுபட்டுவிட்டு தான் இவ்வழக்கில் மேல்முறையீடு செய்ய வேண்டும். அப்போது தான் தனது தந்தையான கருணாநிதி போல உண்மையான சமூகநீதிக் காவலராக குரலற்ற சமூகங்களும் ஸ்டாலினை வாழ்த்தும் என்கின்றனர் அரசியல் ஆய்வாளர்கள்.

நிச்சயம் நீதி கிடைக்கும்

இது குறித்து அரசியல் திறனாய்வாளர் ரவீந்திரன் துரைசாமி கூறும்போது,  வெளிப்படையான சாதிவாரி கணக்கெடுப்புக்குப்பின் எம்.பி.சி. தொகுப்பை பிரித்திருந்தால் இதுபோன்ற பாதிப்பு ஏற்பட்டிருக்காது. வன்னியர்களுக்கு பாமகவும், பிரமலை கள்ளர், மறவர்களுக்காக அனைத்து அரசியல் கட்சிகளிலும் பிரதிநிதித்துவம் இருக்கிறது.  ஆனால், எஞ்சிய சமூகங்கள் ஒரு பகுதியில் அடர்த்தியாக இல்லாததால் அவர்களுக்கு அரசியல் பிரதிநிதித்துவம் கிடைப்பதும் இல்லை. அவர்களின் குரல் அரசியல்வாதிகள் காதில் விழுவதுமில்லை.

குரலற்ற சமூகங்களான வலையர், வண்ணார்,   பர்வதராஜகுல மீனவர் போன்ற சமூகங்களுக்கு குரல் கொடுக்க யாரும் இல்லை.  இதை வாய்ப்பாக பயன்படுத்தி எம்.பி.சி. தொகுப்பில் அவர்களுக்கு அநீதி வழங்கப்பட்டுள்ளது.  கல்வியில் பின்தங்கிய இந்த சமூகங்களை,  கல்வியில் முன்னேறிய சமூகங்கள் கொண்ட 7 சதவீத தொகுப்பில் வைத்துள்ளதால் குரலற்ற சமூகங்களுக்கு கல்வி,  வேலைவாய்ப்பில் பாதிப்பு ஏற்படும். எனவே,  எம்.பி.சி. தொகுப்பில் 7 சதவீதத்தை 4, 3 என பிரித்து குரலற்ற சமூகங்களுக்கு 3 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்றார் ரவீந்திரன் துரைசாமி.