மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தமுமுக சார்பில் மீட்பு குழு

கனமழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக ஒவ்வொரு மாவட்டங்களிலும் தமுமுக சார்பில் மீட்பு குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், சென்னையில் வெள்ள பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளில் 100 க்கும் மேற்பட்ட தொண்டர்கள் களப்பணியில் உள்ளதாகவும் கோவையில் தமுமுக கட்சியினர் தெரிவித்துள்ளனர்.

கோவை மத்திய மாவட்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பாக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. இதில் த.மு.மு.க. மாநில செயலாளர் சாதிக் அலி பேசியதாவது:

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்கள் மழையால் பாதிப்படைந்துள்ளன. குறிப்பாக சென்னை மழையால் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. மழை, வெள்ள பாதிப்புகளை நேரில் சென்று பார்வையிடும் தமிழக முதல்வரின் களப் பணி செயல்பாடு சிறப்பாக உள்ளது. மண்டல வாரியாக ஐஏஎஸ் அதிகாரிகளை நியமித்துள்ளார். அவர்கள் சிறப்பாக செயலாற்றி வருகின்றனர்.

போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், கோவையில் நடைபெற்று வரும் மேம்பால பணிகளை விரைவாக முடிக்க வேண்டும். உக்கடம் 86வது வார்டில் கழிவு நீர் லாரி அங்கு கழிவுகளை கொட்டுவதால், கடுமையான துர்நாற்றம் வீசுகிறது. இதன் காரணமாக வைரஸ் நோய், பன்றி காய்சலால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்காக உடனடியாக தீர்வு காண வேண்டும் எனக் கூறினார்.

தமுமுகவைப் பொறுத்தவரை சுனாமி, கஜா புயல் உள்ளிட்ட இயற்கை சீற்றங்களின் போது, எங்களின் தொண்டர்கள் களப்பணி ஆற்றி வருகின்றனர். தற்போது கனமழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக ஒவ்வொரு மாவட்டங்களிலும் தமுமுக சார்பில் மீட்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி கோவையிலும் மீட்புக்குழு அமைக்கப்பட்டு தொண்டர்கள் பணியாற்றி வருகின்றனர்.

சென்னையில் வெள்ள பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளில் 100 க்கும் மேற்பட்ட தமுமுக தொண்டர்கள் களப்பணியில் உள்ளதாக அவர் தெரிவித்தார்.

இந்த சந்திப்பின் போது, தமுமுக மாவட்ட செயலாளர் கபீர், துணை செயலாளர் ஆசிக் அஹமது, பொருளாளர் அப்பாஸ், மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.