தமிழ் மொழியில் கணினி அறிவியல் துறை: தொடக்கி வைத்த அமைச்சர்

இரத்தினம் பொறியியல் கல்லூரியில் “கற்க கசடற” என்ற தலைப்பில் தமிழ் மொழியில் கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறையினை தமிழக தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் துவக்கி வைத்தார்.

தனியார் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற அந்த விழாவில் அக்கல்லூரி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். துவக்க விழா நிகழ்விற்கு பின்னர் பேட்டியளித்த அமைச்சர் மனோ தங்கராஜ், தாய் மொழியான தமிழ் மொழியில் பொறியியல் துறையில் கற்பிக்கும்முறை துவக்கி வைக்கப்பட்டுள்ளது எனவும், முதன்முறையாக இந்த துறைக்கு தமிழில் பாடம் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது என தெரிவித்தார். இது ஆங்கில மொழியில் சுமாராக படிக்கும் மாணவர்களுக்கும், தமிழில் பாடம் கற்பிக்க எளிதாக இருக்கும் எனவும் தெரிவித்தார். முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இயங்கும் இந்த சட்டமன்றம், பேப்பர் இல்லாத சட்டமன்றமாக செயல்படுவது அனைவரிடத்திலும் வரவேற்பை பெற்றுள்ளது எனவும், அங்குள்ள 3 ஆயிரம் ஊழியர்களுக்கு வரும் 14 ந்தேதி முதல், கணினியிலேயே அனைத்து பணிகளும் மேற்கொள்வது தொடர்பாக பயிற்சி அளிக்க இருப்பதாகவும் தெரிவித்தார்.