கோவை பள்ளிகளில் 8 மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு

கோவையில் உள்ள பள்ளிகளில் மொத்தம் 8 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா தாக்கம் தமிழகத்தில் குறைந்த நிலையில் கடந்த 1ம் தேதி முதல் 9 முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், சுல்தான் பேட்டை அரசுப் பள்ளி மாணவர்கள் மூவருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதோடு, வெவ்வேறு பள்ளிகளில் பயிலும் 5 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, அரசூர் பெண்கள் மேல் நிலைப்பள்ளியில் 11ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவருக்கும், புரவிபாளையம் பெண்கள் மேல் நிலைப்பள்ளியில் 12ம் வகுப்பு படிக்கும் மாணவிக்கும், பொள்ளாச்சி பெண்கள் உயர் நிலைப்பள்ளியில் 12ம் வகுப்பு படிக்கும் 2 மாணவிகளுக்கும், பொள்ளாச்சி தனியார் பள்ளியில் பயிலும் 1 மாணவனுக்கும் கொரோனா உறுதியாகியுள்ளது.

கோவையில் மொத்தம் 8 மாணவ மாணவிகளுக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இந்த மாணவர்களுடன் நெருக்கமாக இருந்த மற்ற மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. இதனால் பள்ளிகள் மூடப்படாது என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.