பல நாடுகளில் டெல்டா வைரஸ் பரவும் அபாயம் உள்ளது: உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

புதிய கொரோனா தொற்றுகள் அதிகம் இந்தியா, பிரிட்டன், பிரேசில், இந்தோனேசியா ஆகிய நாடுகளிலிருந்து ரிப்போர்ட் ஆகியுள்ளதாக உலகச் சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. மேலும் உலக அளவில் கடந்த வாரத்தில் மட்டும் 30 லட்சம் கொரோனா தொற்றுக்கள் ஏற்பட்டுள்ளன என்றும் தெரிவித்துள்ளது.

வாராந்திர தொற்றுநோய் புள்ளிவிபர பட்டியலை உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:

உலகில், 111 நாடுகளில் அதிக வீரியமுள்ள ‘டெல்டா’ வைரஸ் பரவியுள்ளது. டெல்டா, ஆல்பா, காமா, பீட்டா என, நான்கு வகை உருமாறிய வைரஸ்களில், மிக விரைவாக பரவும் ஆற்றல், டெல்டாவுக்கு தான் உள்ளது. இதனால் வரும் நாட்களில், மேலும் பல நாடுகளில் டெல்டா வைரஸ் பரவும் அபாயம் உள்ளது. இதனால், சுகாதார வசதிகளை மேம்படுத்த வேண்டிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, மிகக் குறைவாக தடுப்பூசி செலுத்தியுள்ள நாடுகள், சுகாதார வசதிகளை உருவாக்குவதில் அதிக நெருக்கடியை சந்திக்க நேரிடும். உலகில், 178 நாடுகளில் ஆல்பா வைரஸ் காணப்படுகிறது. பேட்டா, காமா வைரஸ்கள் முறையே, 123 மற்றும் 75 நாடுகளில் பரவியுள்ளன.

பல நாடுகளில் தொற்றுநோய் கண்காணிப்பு, பரிசோதனை உள்ளிட்ட வசதிகள் குறைவாக உள்ளன. அதனால், எப்போது எந்த வகை கொரோனா வைரஸ் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை உறுதிப்படுத்த முடியவில்லை. தற்போது, சர்வதேச போக்குவரத்து அதிகரிக்க துவங்கியுள்ளதால், நோய் தாக்கம் மற்றும் தீர்வுகளுக்கான செயல் திட்டங்களை வகுப்பது அவசியம். உலகில், 300 கோடி பேருக்கு, குறைந்தபட்சம் ஒரு ‘டோஸ்’ தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இது மொத்த மக்கள் தொகையில், 24.7 சதவீதம் தான். ‘கோவாக்ஸ்’ திட்டத்தின் கீழ், ஏழை மற்றும் நடுத்தர வருவாய் நாடுகளுக்கான தடுப்பூசி சப்ளையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.