மீண்டும் சினிமாவில் கவனம் செலுத்தும் கமல்

நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் கடைசியாக 2018-ம் ஆண்டு ‘விஸ்வரூபம் 2’ படம் வெளியானது. அதன்பிறகு அவர் அரசியலில் கவனம் செலுத்தியதால் படங்கள் எதுவும் வெளி வரவில்லை.

கமல்ஹாசன் நடித்து வந்த ‘இந்தியன் 2’ படம் மீது வழக்கு நடந்துக் கொண்டிருக்கிறது. இதையடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் படத்தில் நடிக்கவும் ஒப்பந்தமாகி உள்ளார் கமல். இதன் படப்பிடிப்பும் விரைவில் தொடங்க இருக்கிறது.

இதையடுத்து மலையாளத்தில் வெற்றி பெற்ற த்ரிஷ்யம் 2 படத்தை, தமிழில் பாபநாசம் 2 என்ற பெயரில் ரீமேக் செய்து நடிக்கவும் பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. இதில் கமல்ஹாசன் ஜோடியாக நடிக்க நதியா, மீனா என இருவரின் பெயரும் அடிபடுகிறது. இதன் ரீமேக் உரிமையை நடிகை ஸ்ரீப்ரியா வாங்கியிருக்கிறார்.

அதோடு ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்திலும் கமல் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இது துப்பாக்கி படத்தின் 2-ம் பாகமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதுமட்டுமில்லாமல், வெற்றிமாறன் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்க இருப்பதாகவும், இதுதொடர்பாக பேச்சுவார்த்தை நடப்பதாகவும் செய்திகள் கூறுகின்றன.

தவிர சில வருடங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்ட ’தலைவன் இருக்கின்றான்’ படத்தையும் கமல் இயக்கி நடிக்க திட்டமிட்டு வருகிறாராம். விரைவில் இந்த படங்கள் குறித்த அறிவிப்புகள் அடுத்தடுத்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தேர்தல் முடிந்துவிட்டதாலும், அடுத்து நாடாளுமன்ற தேர்தல் 2024-ல் தான் வரும் என்பதாலும், கமல் படங்களில் கவனம் செலுத்துவதாக பேசிக் கொள்கிறார்கள் இணையவாசிகள்.