திரையரங்கு – கொரோனா – ஓடிடி

தமிழ் சினிமா வரலாற்றில் இந்த 2021 ஆம் ஆண்டை போல மோசமான துவக்கம் இது வரை இருந்திருக்காது. ஆண்டின் துவக்கமே கொரோனாவால் 50 சதவீத இருக்கைகளுடன் ஆரம்பமாகி, 100 சதவிகித இருக்கைக்கு அனுமதி வழங்கப்பட்டு அது மீண்டும் 50 சதவீதமாகி, பிறகு முழுவதும் மூடப்பட்டுவிட்டது.

கடந்த ஆண்டு சுமார் 6 மாதங்களுக்கு மேல் திரையரங்குகள் கதவுகள் மூடப்பட்டு இருந்தது. பிறகு 50 சதவிகித இருக்கையுடன் திறக்கப்பட்டு, பிப்ரவரி 1 முதல் வழங்கப்பட்ட 100 சதவீத அனுமதியும் நீண்ட நாட்கள் நீடிக்கவில்லை. கொரானோ இரண்டாவது அலையின் காரணமாக மீண்டும் ஏப்ரல் 10ம் தேதி முதல் 50 சதவீத இருக்கைகளுடன் செயல்பட்டன தியேட்டர்கள். அடுத்து ஏப்ரல் 26 முதல் தியேட்டர்கள் முழுவதுமாக மூடப்பட்டன. அப்போது மூடப்பட்ட தியேட்டர்கள் கடந்த இரண்டு மாதங்களாக மூடியே உள்ளன.

தியேட்டருக்கு வரவழைத்த படங்கள்

ஜனவரி, பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் ஆகிய நான்கு மாதங்களில் மட்டுமே தியேட்டர்களில் புதிய படங்கள் வெளியாகின. அந்த நான்கு மாதங்களில் பிரபல முன்னணி நடிகர்களின் படங்கள் சில மட்டுமே வெளியாகின.

மக்களை தியேட்டருக்கு வர வைத்த மாஸ்டர் விஜய் நடித்த மாஸ்டர், சிம்பு நடித்த ஈஸ்வரன், சந்தானம் நடித்த பாரிஸ் ஜெயராஜ், விஷால் நடித்த சக்ரா, கார்த்தி நடித்த சுல்தான், தனுஷ் நடித்த கர்ணன் ஆகியவை மட்டுமே முன்னணி நடிகர்களின் படங்கள். இவற்றில் மாஸ்டர், சுல்தான், கர்ணன் ஆகிய படங்கள் மட்டுமே வசூல் ரீதியாக வெற்றி பெற்ற படங்கள் என கோலிவுட் வட்டாரங்களில் தெரிவித்தார்கள்.

அதற்கடுத்த கட்டத்தில் இருக்கும் நடிகர்களின் படங்களில், சிபிராஜ் நடித்த கபடதாரி, ஜீவா, அருள்நிதி நடித்த களத்தில் சந்திப்போம், எஸ்ஜே சூர்யா நடித்த நெஞ்சம் மறப்பதில்லை, ராணா டகுபட்டி, விஷால் நடித்த காடன் ஆகிய படங்கள் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை.

கதைக்கு முக்கியத்துவம் உள்ள சிறிய படங்கள் என்று சொல்லப்பட்ட “கேர் ஆப் காதல், சங்கத்தலைவன், அன்பிற்கினியாள், தேன்,” ஆகிய படங்களுக்கு விமர்சன ரீதியாக ஒரு வரவேற்பு கிடைத்தாலும் ரசிகர்களிடம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.

ஓரளவு லாபம் :

ஜனவரி மாதம் 1ம் தேதி முதல் தியேட்டர்களை மூடுவதற்கு முன்பு கடைசியாக, ஏப்ரல் 23ம் தேதி வரை சுமார் 60க்கும் மேற்பட்ட படங்கள் வெளியாகின. அந்த படங்களில் வசூல் ரீதியாக ஓரளவிற்கு லாபத்தைக் கொடுத்த படங்கள் என மூன்றே மூன்று படங்களைத்தான் குறிப்பிட்டார்கள். 50 சதவீத இருக்கைகளிலும் அந்தப் படங்கள் குறிப்பிடும் அளவிற்கான லாபத்தைக் கொடுத்தது பெரிய விஷயம்தான்.

தேர்தலும், கொரோனா பயமும் கொரானோ தொற்று பயம் ஒரு பக்கம், ஏப்ரல் மாதத் துவக்கத்தில் தமிழகத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தல் ஒரு பக்கம், அதற்காக மார்ச் மாதத்தில் நடந்த பிரச்சாரம், ஓடிடி தளங்களில் சில படங்களின் வெளியீடு என தியேட்டர்களுக்கு மக்கள் வரும் எண்ணிக்கை குறைவான அளவில்தான் இருந்தது.

திரையரங்கு – ஓடிடி

அதி தீவிர சினிமா பார்க்கும் ரசிகர்கள் மட்டும்தான் தியேட்டர்களுக்கு மீண்டும் வந்தார்கள். அதில் கூட விஜய் நடித்த மாஸ்டர் படத்தைப் பார்க்க வந்த அளவிற்கு மற்ற படங்களுக்குக் கூட்டம் வரவில்லை. மாஸ்டர் படத்தையும் படம் தியேட்டர்களில் வெளியான 16 நாட்களிலேயே ஓடிடி தளத்தில் வெளியிட்டார்கள். அதன் காரணமாகவும் அந்தப் படத்தின் வசூல் பெரிதும் பாதிக்கப்பட்டது. இருப்பினும் சில தியேட்டர்களில் ஓடிடி வெளியீட்டிற்குப் பின்பும் படத்தை திரையிட்டார்கள்.

தனுஷ் நடித்த கர்ணன் படத்திற்கு விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பு கிடைத்தது. ஆனால், படம் வெளியான இரண்டே வாரங்களில் தியேட்டர்களை முழுவதுமாக மூடியதால் இப்படத்திற்கான வசூல் தொகை குறைந்து போனது.

ஓடிடியில் நெகட்டிவ் :

ஒவ்வொரு ஆண்டும் வழக்கம் போல வெளிவரும் படங்களைப் போல இந்த அரையாண்டிலும் வந்த சுவடே தெரியாமல் வந்து போன பல படங்கள் இருந்தன. சில படங்களுக்கான டிரைலர்கள், தகவல்கள் ஆகியவற்றை இப்போது வரை கூகுள் செய்தாலும் கிடைக்கவில்லை. ஓடிடி வெளியீடு கடந்த வருடத்தில் நிகழ்ந்த ஓடிடி நேரடி வெளியீடு புது வருடத்தின் துவக்கமான ஜனவரி மாதத்திலும் இருந்தது. மாதவன் நடித்த மாறா, ஜெயம் ரவி நடித்த பூமி ஆகிய படங்கள் ஒரு வார இடைவெளியில் ஓடிடி தளங்களில் வெளியாகின. இரண்டு படங்களுமே ரசிகர்களின் வரவேற்பைப் பெறவில்லை. பூமி படம் பற்றி கடுமையான நெகட்டிவ் விமர்சனங்கள் வெளிவந்தன.

சில நல்ல படங்கள் :

கவனம் ஈர்த்த டெடி, ஏலே, மண்டேலா ஆனாலும், ஆர்யா நடித்த டெடி படம் ஓடிடியில் வெளியாகி சிறுவர், சிறுமியர்களைக் கொஞ்சம் கவர்ந்தது. டிவியில் நேரடியாக வெளியான சமுத்திரக்கனி நடித்த ஏலே படமும், யோகி பாபு நடித்த மண்டேலா படமும் மாறுபட்ட படங்களாக அமைந்து ரசிக்க வைத்தன. அப்படங்கள் டிவியில் முதலில் வெளியானலும் உடனே ஓடிடி தளங்களிலும் வெளியாகி பலரையும் பார்க்க வைத்தது. அதற்கு அந்தப் படங்களுக்குக் கிடைத்த பாசிட்டிவ் விமர்சனம் பெரிதும் உதவியாக இருந்தது.

ஏமாற்றம் :

ஏமாற்றிய ஜகமே தந்திரம், த்ரிஷா நடித்த பரமபத விளையாட்டு, ஜிவி பிரகாஷ்குமார் நடித்த வணக்கம்டா மாப்ளே ஆகிய படங்கள் ஏமாற்றத்தையே தந்தன. அந்த ஏமாற்றத்திற்கு மேலும் பெரிய ஏமாற்றமாக தனுஷ் நடித்து ஓடிடி தளத்தில் வெளிவந்த ஜகமே தந்திரம் படம் அமைந்தது. தியேட்டர்களில் எதற்கு வெளியாகிறது என்று தெரியாமலேயே வெளியாகும் சில படங்களைப் போலவே ஓடிடி தளங்களிலும் சில படங்களை எதற்கு வெளியிடுகிறார்கள் என்றே தெரியவில்லை.

2020ம் ஆண்டில் கொரோனா தொற்று முதல் அலையின் காரணமாக தியேட்டர்கள் மூடப்படுவதற்கு முன்பாக சுமார் மூன்று மாதங்களில் 50 படங்கள் வரை வெளியாகியிருந்தன. 2021ல் கொரானோ தொற்று இரண்டாவது அலையின் காரணமாக தியேட்டர்கள் மூடப்படுவதற்கு முன்பாக சுமார் 4 மாதங்களில் 60 படங்கள் வரை வெளியாகியுள்ளன. இரண்டிற்கும் பெரிய வித்தியாசமில்லை.

100 ஆண்டில் முதல் முறை :

2021 அரையாண்டில் 50 சதவீத இருக்கை, 100 சதவீத இருக்கை, மீண்டும் 50 சதவீத இருக்கை, தியேட்டர்கள் மூடல் என தியேட்டர்களுடைய நிலை வெவ்வேறாக இருந்தது. 100 வருடத்திற்கும் மேலான தமிழ் சினிமா வரலாற்றில் இப்படி நடப்பது இதுவே முதல் முறை. மீண்டும் எப்போது மீண்டும் தியேட்டர்களை எப்போது திறக்க அனுமதி கொடுப்பார்கள் என்பது உறுதியாகத் தெரியவில்லை. ஜுலை 15 முதலோ அல்லது ஆகஸ்ட் 1 முதலோ 50 சதவீத இருக்கைகளுடன் திறக்க அனுமதி கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறார்கள்.

 

முதல் அலையில் மாஸ்டர், இரண்டாம் அலையில் வலிமை :

அதே சமயம் தியேட்டர்களில் வெளியிட தள்ளி வைத்த சில முக்கிய படங்களை ஓடிடி தளங்களில் வெளியிடுவதற்கான பேச்சு வார்த்தை நடந்து முடிந்துவிட்டதாகவும் தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன.

தியேட்டர்கள் மீண்டும் திறக்கப்பட்டால் மக்கள் மீண்டும் வரவழைக்க முன்னணி நடிகரின் படங்கள் தான் தேவை. அப்படி ஒரு படமாக அஜித் நடித்துள்ள வலிமை படம் மட்டுமே சீக்கிரம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கொரோனா முதல் அலைக்குப் பிறகு தியேட்டர்கள் திறக்கப்பட்ட போது மக்கள் வருவதற்குக் காரணமாக விஜய்யின் மாஸ்டர் இருந்தது போல, இரண்டாவது அலைக்குப் பிறகு தியேட்டர்கள் திறக்கப்பட்டால் வலிமை படம் மக்கள் வருவதற்குக் காரணமாக இருக்கும் என எதிர்பார்க்கிறார்கள்.

படமென்றால் திரையரங்கில் தான் வெளியாகும் என்ற நிலை கொரோனா ஊரங்கு காரணமாக நேரடி ஓடிடி வெளியீடு என்ற அளவிற்கு ஒரே ஆண்டில் வளர்ந்துவிட்டது. அதுவரை ஃபைரசி என்ற பெயரில் அனைவரின் வீட்டிற்கே வந்தாலும், அதிகார பூர்வமாக ஓடிடி மூலமாக வீட்டிற்கு வந்தது திரைப்பட ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியாக உள்ளது. இருப்பினும் திரைத்துறையை சேர்ந்தவர்களுக்கு இது சற்று ஏற்றுகொள்ளமுடியாததாக இருக்கிறது.

ரசிகர்களுக்கு இது மேலும் வசதியாக எப்பொழுது வேண்டுமானாலும் பார்த்து கொள்ளாம், எங்கும் எதிலும் காணலாம் என்ற வசதிதான் இதற்கு காரணம். எப்படியானாலும் சினிமா தொழில்நுட்ப ரீதியில் ஒரு திடீர் வளர்ச்சியை பெற்றுள்ளது என்பது தான் நிதர்சனம். இதற்கு கொரோனாவும் ஒரு காரணம்.