சாலையை முறையாக அமைக்க கோரி போராட்டம் நடத்திய மக்கள்

கோவை சாய்பாபா காலனி பகுதியில் ஏற்கனவே உள்ள சாலையை தோண்டாமல்  அதன்  மீதே மீண்டும்  சாலை போடுவதால், வீடுகள் சாலை மட்டத்தில் இறங்கி மழை நீர் தேங்குவதாக கூறி அப்பகுதி மக்கள் இன்று (5.5.2021) போராட்டம் நடத்தினர்.

சாய்பாபா காலனி 12வது வார்டு சின்னம்மாள் வீதியில் தார் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.  இன்று அப்பகுதியில் தார்சாலை அமைக்கும் பணி நடைபெறும் இடத்திற்கு சென்ற மக்கள் பணிகளை நிறுத்தக்கோரியும் தார் சாலையை முறையாக அமைக்க கோரியும் சாலையில் அமர்ந்து திடீர் போராட்டம் நடத்தினர்.

இதுகுறித்து முன்னாள் மேயர் வெங்கடாசலம் கூறுகையில்

இந்தப் பகுதியில் சாலை அமைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம். அதன்படியே பல இடங்களிலும் சாலை அமைத்தனர். ஆனால் முன்னதாக இருந்த சேதமடைந்த பழைய  சாலைகளை தோண்டி அகற்றாமல் அதன் மீதே புதிய சாலை அமைக்கின்றனர். இதனால் சாலை மேடு ஆகி  சாலையோரம் உள்ள வீடுகளின் மட்டத்திற்கு மேல் சாலை அமைகிறது. எனவே சாலையை முறையாக தோண்டி அதன் பின்னர் அமைக்க வேண்டும். என்றார்.

இதனைத் தொடர்ந்து மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, பழைய சாலையை தோண்டி அகற்றிய பின்னரே புதிய சாலை போடப்படும் என்று அதிகாரிகள் கூறியதை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

இப்போராட்டத்தில் முன்னாள் கவுன்சிலர்  காய்த்ரி மற்றும் 20க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.