கே.பி.ஆர் கல்வி நிறுவனங்கள் மற்றும் அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து நடத்திய இலவச கண் பரிசோதனை முகாம் கே.பி.ஆர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் இன்று (21.4.2021) நடைபெற்றது.
இதன் துவக்க விழாவில் கே.பி.ஆர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் முதல்வர் அகிலா தொடக்க உரையாற்றினார்.
கே.பி.ஆர் குழுமங்களின் தலைவர் டாக்டர் கே.பி.ராமசாமியின் வழிகாட்டுதலில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் கல்லூரியின் முதன்மைச் செயலர் ஏ.எம்.நடராஜன், மருத்தவ மையத்தின் முதன்மை மருத்துவர் டாக்டர் ரங்கநாயகி மற்றும் கே.பி.ஆர் கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரியின் முதல்வர் பாலுசாமி ஆகியோர் சிறப்பு அழைப்பாளரகளாகக் கலந்து கொண்டனர் .
அரவிந்த் கண் மருத்துவமனையின் 20 பேர் அடங்கிய மருத்துவக் குழு, கண் சம்மந்தப்பட்ட அனைத்து குறைபாடுகளுக்கான மருத்துவ பாரிசோதனைகளை பேராசிரியர்கள், ஊழியர்கள் மற்றும் பணியாளர்களை உள்ளடக்கிய ஏறத்தாழ 400 பேருக்கு மேற்கொண்டது.
மேலும் மேற்சிகிச்சை மேற்கொள்ள வேண்டியவர்களுக்கு மருத்துவப் பரிந்துரை வழங்கப்பட்டது. தூய்மைப் பணியாளர்களுக்கு மிகக் குறைந்த விலையில் கண் கண்ணாடி வழங்கப்பட்டது.
இந்த முகாமின் தேவை குறித்த தன்னுடைய செய்திக் குறிப்பில் முதல்வர் அகிலா,கோவிட்-19 தீநுண்மியின் இரண்டாவது அலை நேரத்திலும் மருத்துவப் பரிசோதனைக்கு அனுமதி வழங்கிய அரவிந்த் கண் மருத்துவமனை நிர்வாகத்தினரைப் பாராட்டியதோடு மட்டுமின்றி பார்வைக் குறைபாடுகள் குறித்த விழிப்புணர்வின் தேவை மற்றும் நீரிழிவு நோயாளிகள் எதிர்கொள்ளும் முழுமையான பார்வைக் குறைபாடுகள் குறித்தும் எடுத்துரைத்தார் .