ஹீரோ மோட்டார் வாகன உற்பத்தியை தற்காலிகமாக நிறுத்த முடிவு

இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதன் காரணமாக, ஹீரோ மோட்டார் நிறுவனம் தனது வாகன உற்பத்தியை தற்காலிகமாக நிறுத்த முடிவெடுத்துள்ளது.

இது குறித்து நிறுவனம் சார்பில் இன்று வெளியிடப்பட்ட அறிக்கையில், “ கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதன் எதிரொலியாக மக்களின் பாதுகாப்பு மற்றும் நலன் கருதி ஹீரோ நிறுவனத்தின் அனைத்து வாகன உற்பத்திகளும் இந்தியா மற்றும் உலக நாடுகளில் தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது.

ஒவ்வொரு ஆலையும் ஏப்ரல் 22 மற்றும் மே1 ஆகிய காலக்கட்டங்களில் நான்கு நாட்கள் மூடப்படும். மூடப்படும் காலங்களில் நிறுவனம் சந்திக்கும் பொருளாதார இழப்பு, மீதமுள்ள காலாண்டில் சமன் செய்யப்படும்.

மிகப்பெரிய இருசக்கர மோட்டார் வாகன நிறுவனமான ஹீரோ இந்தியாவில் 6 இடங்களில் தனது ஆலைகளை நிறுவியுள்ளது. இதன் மூலம் 11 லட்சம் வாகனங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. 2020 ஆம் ஆண்டு அறிக்கையின் படி ஹீரோ நிறுவனத்தில் 8,599 நிரந்தர பணியாளர்களும் மொத்தமாக 21,091 பணியாளர்களும் பணியாற்றுவது தெரியவந்தது.