பப்ளிக் வெல்ஃபேர் பிரெடரிக் ரஸல் பிறந்த தினம்

ராணுவத்தில் டைஃபாய்டு தடுப்பூசியை அறிமுகம் செய்தவரான பிரிகேடியர் ஜெனரல் பிரெடரிக் ஃபுல்லர் ரஸல் 1870 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 17 ஆம் தேதி அமெரிக்காவின் நியூயார்க் மாநிலத்திலுள்ள அபர்ன் நகரில் பிறந்தார்.

ராணுவ மருத்துவப் பிரிவில் பணிபுரிந்த இவர், வீரர்களுக்கு டைஃபாய்டு வராமல் தடுக்க தடுப்பூசி வழங்கும் திட்டம் குறித்து ஆராய்ச்சி மேற்கொண்டார். அதையடுத்து, ராயல் மருத்துவக் கல்லூரி பேராசிரியரும், டைஃபாய்டு நோய்த் தடுப்பு மருந்து ஆராய்ச்சியாளருமான சர்.அல்ம்ரோத் ரைட்டின் ஆய்வுக்கூடப் பார்வையாளராக இவரை இங்கிலாந்துக்கு அனுப்பி வைத்தனர்.

இவர் டைஃபாய்டு கிருமிகளை அழிக்கும் தடுப்பு மருந்தை மேம்படுத்தினார். பிறகு, ராணுவ வீரர்களுக்கு 1910 ஆம் ஆண்டு முதல் சிறிது சிறிதாக தடுப்பு மருந்து வழங்கப்பட்டது. அது நல்ல பலனைத் தந்ததால், 1911 ஆம் ஆண்டு அனைவருக்கும் தடுப்பூசி கட்டாயமாக்கப்பட்டது.

பொதுநலத் திட்டங்களில் இவரது பங்களிப்பைப் பாராட்டி அமெரிக்க தேசிய அறிவியல் அகாடமி ‘பப்ளிக் வெல்ஃபேர்’ பதக்கம் வழங்கியது. அடுத்த சில ஆண்டுகள் ஹார்வார்டு பல்கலைக்கழகத்தில் நோய்த்தொற்று மற்றும் தடுப்பு மருந்து துறை பேராசிரியராக பணியாற்றினார்.

டைஃபாய்டு தடுப்பு மருந்தை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவந்து, இறுதிவரை நோய்த் தடுப்பு ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு வந்த பிரிகேடியர் ஜெனரல் பிரெடரிக் ஃபுல்லர் ரஸல் 1960 ஆம் ஆண்டு மறைந்தார்.