“கதைகள் கற்பனைத்திறனை வளர்க்கும்”

– கதை சொல்லி அமுதா கார்த்திக்

ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ்- வழங்கும் ‘கண்மணியே கதை கேளு’ என்னும் தொடர் கதை சொல்லும்  நிகழ்வு ஆர் எஸ் புரம்,சிந்து சதன் ஷாலில் , ஆகஸ்ட்  4, ஞாயிறு அன்று நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் கதைகளை மட்டும் அல்லாது குழந்தைகளுக்கு பாரம்பரிய கலாச்சாரத்தையும் கற்றுத் தந்தார் கதை சொல்லி அமுதா கார்த்திக். குழந்தைகளுக்கு சோறு ஊட்ட, தூங்கவைக்க அம்மாமார் கதை சொல்வார்கள். விடுமுறைக்கு குழந்தைகள் ஊருக்கு  செல்வதே தாத்தா பாட்டிகளிடம் கதை கேட்கும் ஆர்வத்தில் தான். ஆனால் இன்றைக்கு விடுமுறையிலும் ஓவியம், யோகா, கணினி பயிற்சி என  குழந்தைகளின் மூளையை நிரப்புவதில் குறியாக இருக்கிறார்கள் பெற்றோர்கள். இருப்பினும், நூற்றுக்கணக்கான சுட்டிக்  குழந்தைகள் உற்சாகத்துடன் கதை கேட்க வந்திருந்தார்கள்.

உணவின் முக்கியத்துவத்தையும், உணவு உண்ணும் முறையும் கதைகளின் வாயிலாக எடுத்துரைத்தார். ‘பலே பலே போண்டா போலி பயமின்றி உருண்டும் புலி’.. ,கொட்டாவி ராஜா’. போன்ற பல கதைகளை கூறி குழந்தைகளை சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்தார்.

உணவை தரையில் உட்கார்ந்து உண்ண வேண்டும் டி,வி முன்பு உண்ணக்கூடாது, சரியான நேரத்தில் தூங்க வேண்டும் எனும் இன்னும் பல கருத்துக்களை தன் கதைகளின் வாயிலாக  பாடியும் ,நடித்து காட்டி குழந்தைகளின் உற்சாகத்தை ஊக்குவித்தார். இந்நிகழ்வானது வெறும் கதை சொல்லி கேட்கும் நிகழ்வாக மட்டும் அமையவில்லை.

மேலும் குழந்தைகளின் கற்பனைத் திறன் ,ஞாபக சக்தி போன்ற பல திறமைகளை வெளிக் கொள்ளும் நிகழ்வாக அமைந்தது. கதை கேட்பதால் ஒரு குழந்தையின் பல்வேறு கற்பனைகளை வெளிக்கொண்டுவரும் ஆற்றலை ஏற்படுத்தும். மேடைகளை எதிர்கொள்ளும் தன்னம்பிக்கையைக் கொடுக்கும், சமூக முன்னேற்றத்திற்கான பாதையை ஏற்படுத்தித் தரும், வாசித்தல் திறனை ஊக்குவிக்கும் என்கிறார் அமுதா கார்த்திக்.

சமூக மாற்றத்தை குழந்தைகளிடம் இருந்து துவங்குவதே சரியாக இருக்கும். அந்த மாற்றத்தை உருவாக்கும் கருவியாய் கதைகள் இருக்கின்றது. இந்த கதை சொல்லும் நிகழ்ச்சி வரும் செப்டம்பர் மாதம், முதல் ஞாயிற்றுக்கிழமையில் மீண்டும் ஆர்.எஸ்.புரம் சிந்து சதன் ஹாலில் நடைபெறும்.