தமிழக வளர்ச்சித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதனின் தந்தை மறைவு

தமிழக தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதனின் தந்தை முத்தூர் சா. பெருமாள்சாமி உடல் நலக்குறைவால் மரணமடைந்தார்.

சா. பெருமாள்சாமி (94)  வயது மூப்பு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாகக் கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் பிப்.23 காலை இயற்கை எய்தினார். இந்நிலையில், அவரின் மறைவையொட்டி தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். அதில் , “தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சரும் கழக உயர்நிலை செயல் திட்டக்குழு உறுப்பினருமான மு.பெ.சாமிநாதன் அவர்களின் அருமைத் தந்தை முத்தூர். சா. பெருமாள்சாமி அவர்கள் மறைந்த செய்தியறிந்து வருந்தினேன்.

தந்தையை இழந்து தவிக்கும் மு.பெ.சாமிநாதனை தொலைப்பேசி வாயிலாகத் தொடர்புகொண்டு எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்தேன். அப்போது, 94 ஆண்டுகளைக் கடந்து நிறைவாழ்வு வாழ்ந்த தன் தந்தை, அவரது இறுதி மூச்சுவரை உழவராக வாழ்ந்ததைக் குறிப்பிட்டார். பெருமாள்சாமி அவர்களது குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் மீண்டும் எனது ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.” என இரங்கல் தெரிவித்துள்ளார்.