பி.எஸ்.ஜி செவிலியர் கல்லூரியில் உலக சுகாதார தினம் அனுசரிப்பு

ஆரோக்கியமான வாழ்க்கையின் முக்கியத்துவத்தை முழுமையாக உணர்த்தும் பொருட்டு, உலக சுகாதார தினம் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 6 ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது.

பி.எஸ்.ஜி செவிலியர் கல்லூரி மாணவ செவிலியர் சங்கம், நாட்டு நலப்பணித் திட்டம் மற்றும் சமூக நல செவிலியர் துறை இணைந்து உலக சுகாதார தினத்தை முன்னிட்டு ‘நமது உலகம் நமது ஆரோக்கியம்’ என்ற கருப்பொருளில் விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தியது.

இதில் யோகா பயிற்சி, உடல் நலக்கல்வி, குறு நாடகம், விளையாட்டுகள் மற்றும் பள்ளி சுகாதார மேளா போன்ற பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றன.

பீளமேடு பி.எஸ்.ஜி கிருஷ்ணம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் ஆலோசகர் ஜலாதரன் பி.எஸ்.ஜி விளையாட்டு மைதானத்தில் எளிய யோகாசனங்களை மாணவர்களுக்கு செய்து காண்பித்தார். இதில் சுமார் 400 மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து, பி.எஸ்.ஜி மருத்துவமனை வளாகத்தில் 2ம் ஆண்டு மாணவர்கள் குறு நாடகம், நலக்கல்வி மற்றும் விளையாட்டுகள் மூலம் ஆரோக்கியமான வாழ்க்கை முறை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

பி.எஸ்.ஜி வேடப்பட்டி மேல்நிலை பள்ளியில் 4ம் ஆண்டு மாணவர்கள் ஆரோக்கியமான வாழ்க்கை முறை, சுற்றுப்புற சுகாதாரம், நொறுக்கு தீனிகளால் ஏற்படும் தீமைகள், உடற்பயிற்சி, நடனம் மற்றும் ஊட்டச்சத்து கண்காட்சிகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

இதன்முலம் சுமார் 150 மாணவர்கள் பயனடைந்தனர். நிகழ்ச்சியின் முடிவில் பொதுமக்களுக்கும் பள்ளி மாணவர்களுக்கும் விதைகள் வழங்கப்பட்டன.

 

Source: Press Release