காங்கிரஸ் கட்சியின் 137 வது நிறுவன ஆண்டு விழா: காங்கிரஸ் கட்சியினர் கொண்டாட்டம்

கோகலே, மகாத்மா காந்தி உள்ளிட்ட பல்வேறு சுதந்திரப் போராட்ட தியாகிகள் மற்றும் ஜவகர்லால் நேரு, காமராஜர், இந்திரா காந்தி என நாட்டின் முக்கிய தலைவர்கள் இருந்த காங்கிரஸ் கட்சி தொடங்கி 137 வது நிறுவன ஆண்டு விழாவை நாடு முழுவதும் உள்ள காங்கிரஸ் கட்சியினர் கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில் கோவை கோபாலபுரம் பகுதியில் உள்ள காமராஜ் பவனில் 137 வது ஆண்டு தொடக்க விழாவில் ஸ்ரீபெரும்புதூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற குழு தலைவருமான செல்வப்பெருந்தகை கலந்து கொண்டு கட்சி கொடியேற்றி வைத்து மரியாதை செய்தார். தொடர்ந்து அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய செல்வப்பெருந்தகை மத்தியில் உள்ள பா.ஜ.க.அரசை அகற்றி, வரும் தேர்தலில் இளம் தலைவர் ராகுல் காந்தியை பிரதமராக்குவதே இந்த நாளில் பிரகடனப்படுத்துவதாக தெரிவித்தார். நிகழ்ச்சியில் செயல் தலைவர் மயூரா ஜெயக்குமார் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.