இந்தியாவில் மின்சார காருக்கு இறக்குமதி வரியை குறைக்க டெஸ்லா நிறுவனம் கோரிக்கை

இந்தியாவில் மின்சார காருக்கு இறக்குமதி வரியைக் குறைக்கும்படி பிரதமர் அலுவலகத்திற்கு டெஸ்லா நிறுவனம் கோரிக்கை வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

உலக பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க்கின் நிறுவனமான டெஸ்லா, தனது மின்சார காரை இந்தியாவில் அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளது. முதல்கட்டமாக வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யவும், பின்னர் கிடைக்கும் வரவேற்பை பொறுத்து இந்தியாவில் உற்பத்தி செய்யவும் அவர் திட்டமிட்டுள்ளார். ஆனால், இந்தியாவில் மின்சார கார் இறக்குமதிக்கான வரி அதிகமாக உள்ளதால் டெஸ்லா நிறுவனத்திற்கு ஒரு பிரச்னையாக உள்ளது.

உலக நாட்களிலேயே இந்தியா அதிக இறக்குமதி வசூலிப்பதாக டெஸ்லா தரப்பில் ஏற்கனவே கூறியிருந்தது. இதனால் இறக்குமதி வரியைக் குறைக்கக் கோரிப் பிரதமர் அலுவலகத்தை அணுகியுள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், பிரதமர் மோடியை சந்தித்து டெஸ்லா நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலர் எலான் மஸ்க் இதுகுறித்து ஆலோசனை நடத்த நிர்வாகிகள் சார்பில் நேரம் கேட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

அதேநேரத்தில் டெஸ்லா நிறுவனத்திற்காக இறக்குமதி வரியை குறைத்தால், இந்தியாவின் உள்நாட்டு மின்சார கார் உற்பத்தி நிறுவனங்கள் பாதிக்கப்படும் என உள்நாட்டு நிறுவனங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.