கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் புதிய கட்டுப்பாடுகளை விதித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது
- கோவை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட தெருக்களில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படுவதால் அத்தெருக்களில் இயங்கும் அத்தியாவசிய கடைகளான பால், மருந்தகம், காய்கறி கடைகள் தவிர மற்ற கடைகள் அனைத்தும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இயங்க தடை விதிக்கப்படுகிறது.
- மாநகராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளில் உள்ள அனைத்து நகைகடைகள் மற்றும் துணிகடைகள் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் இயங்க தடை விதிக்கப்படுகிறது.
- அனைத்து பூங்காக்களிலும், சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் பொதுமக்கள் வருகைக்கு தடைவிதிக்கப்படுகிறது.
- அனைத்து மால்களும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இயங்க தடைவிதிக்கப்படுகிறது.
- மாவட்டத்தில் உள்ள அத்தியாவசிய கடைகள் தவிர அனைத்து கடைகளும் இரவு 10 மணிக்கு மூடப்படுவதற்கு ஏதுவாக வாடிக்கையாளர்களை இரவு 8 மணி அளவில் கட்டுப்படுத்த வேண்டும்.
- மேலும் அனைத்து பணியாளர்களும் கண்டிப்பாக ஒரு தவணை தடுப்பூசியாவது செலுத்தப்பட்டிருப்பதை கடை உரிமையாளர்கள் உறுதி செய்ய வேண்டும்.
- மாவட்டத்தில் உள்ள அனைத்து உணவகங்களும், அடுமனைகளும் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் இயங்க அனுமதிக்கப்படுகிறது. மாலை 6.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை பார்சல் சேவைக்கு மட்டும் அனுமதி அளிக்கப்படுகிறது.
- மார்க்கெட்டுகளில் மொத்த விற்பனை நிலையங்களுக்கு மட்டும் அனுமதி மற்றும் 50 சதவிகித கடைகள் சுழற்சி முறையில் இயங்க அனுமதிக்கப்படும்.
- மாவட்டத்தில் உள்ள உழவர் சந்தைகள் சுழற்சி முறையில் 50 சதவிகித கடைகளுடன் இயங்க அனுமதிக்கப்படுகிறது.
- அனைத்து வார சந்தைகளும் இயங்க தடை விதிக்கப்படுகிறது.
- பொள்ளாச்சி மாட்டு சந்தை தற்காலிகமாக இயங்க தடைவிதிக்கப்படுகிறது.
- கேரள-தமிழ்நாடு மாநில எல்லைகள் அனைத்தும் சோதனைச்சாவடி அமைத்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. சோதனைச்சாவடி வழியாக கோயம்புத்தூர் மாவட்டத்திற்குள் வரும் பயணிகள் அனைவரும் 72 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட சான்று அல்லது கொரோனா தடுப்பூசி (2 தவணைகள்) செலுத்தப்பட்டதற்கான சான்று உடன் வைத்திருக்க வேண்டும்.