வரும் 17ம் தேதி போலியோ சொட்டு மருந்து முகாம்கள்

தேசிய போலியோ நோய் ஒழிப்புத் திட்டத்தின்கீழ் கோவை மாநகராட்சிப் பகுதிகளில் வரும் 17ம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாநகராட்சியின் சார்பில் போலியோ நோய் தடுப்பு சொட்டு மருந்து வழங்கும் முகாம்கள் நடைபெறவுள்ளது.

இம்முகாம் காலை 7.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை தொடர்ந்து நடைபெறும். இதற்காக அனைத்து மாநகராட்சி நகர்நல மையங்கள், மருந்தகங்கள், சத்துணவுக் கூடங்கள் மற்றும் மாநகராட்சிப் பகுதிகளிலுள்ள அனைத்து தனியார் மருத்துவமனைகள் ஆகியவற்றில் பிறந்த குழந்தைகள் முதல் 5 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் இலவசமாக போலியோ நோய்த்தடுப்பு சொட்டு மருந்து வழங்கப்படவுள்ளது. வெளி மாநிலங்களிலிருந்து வரும் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கும் வகையில் மாநகராட்சி பிரதான அலுவலகம், ரயில் நிலையம், 5 பேருந்து நிலையங்கள் மற்றும் 5 நடமாடும் ஊர்திகள் ஆகியவற்றில் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. மாநகரப் பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள முகாம்களில் வழங்கப்படவுள்ள போலியோ நோய் தடுப்பு சொட்டு மருந்து முற்றிலும் பாதுகாப்பானது ஆகும். எனவே, கோவை மாநகரில் வசிக்கும் அனைத்து பொது மக்களும் தங்களின் 5 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் எந்தவிதமான நோய்வாய்ப்பட்டிருந்தாலும் அதனைக் கருத்தில் கொள்ளாமல் கண்டிப்பாக அனைத்து குழந்தைகளுக்கும் போலியோ நோய்த் தடுப்பு சொட்டு மருந்து வழங்கி நமது மாநகராட்சிப் பகுதியிலிருந்து போலியோ நோயினை அறவே ஒழித்திட அனைவரும் ஒத்துழைப்பு நல்குமாறு மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் குமாரவேல் பாண்டியன் கேட்டுக் கொண்டார்.