செல்வபுரத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று

கோவை மேட்டுப்பாளையம் சாலையில் செயல்பட்டு வந்த எம்.ஜி.ஆர் மொத்த மார்க்கெட்டில் கடை வைத்துள்ள 3 பேருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர்களின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் உட்பட 30க்கும் மேற்பட்டோருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர்கள் அனைவரும் கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட நிலையில் 10 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். மீதமுள்ளவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது.

இதனிடையே இவர்களில் பலர் வசித்து வந்த செல்வபுரம் அசோக் நகர், கோவிந்தசாமி லே அவுட் பகுதியில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 100 க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து செல்வபுரம் அசோக் நகர், கோவிந்தசாமி லே அவுட் ஆகிய பகுதிகள் தனிமைப்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டு தடுப்புகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றது. வாகனங்கள் மூலம் கிருமிநாசினி தெளிக்கப்பட்டுள்ளது. அந்த பகுதி முழுவதும் சுகாதாரத்துறை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்ட நிலையில் பொது மக்களில் சிலர் வேக வேகமாக உடைமைகளை எடுத்துக்கொண்டு அந்த பகுதியில் இருந்து வெளியேறினர். கோவையில் நேற்று வரை தொற்று எண்ணிக்கை 741 ஆக இருந்த நிலையில் இன்று ஒரே நாளில் நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் கோவையில் பாதிப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.