தண்ணீரை அதிகம் குடிப்பதால் ஒட்டகங்களை கொல்ல ஆஸ்திரேலியா முடிவு!

மெல்போர்ன்,

தண்ணீரை அதிகம் குடிப்பதாகக் கூறி சுமார் 10 ஆயிரம் ஒட்டகங்களை கொல்ல ஆஸ்திரேலியா முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஐந்து நாட்களில் ஒட்டகங்களை கொல்வதற்கு சிறப்புக் குழுவையும் ஆஸ்திரேலியா அமைத்துள்ளது. ஹெலிகாப்டரில் பறந்த படி ஒட்டகங்களை சுட்டுக்கொல்லும் பணியை இந்தக்குழு மேற்கொள்ளும்.

தெற்கு ஆஸ்திரேலியாவில் அதிகம் காணப்படும் ஃபெரல்வகை ஒட்டகங்கள், மிக அதிகளவில் தண்ணீர் குடித்து மனிதர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதால் அவற்றை சுட்டுக்கொல்லும் முடிவை அந்நாட்டு அரசு எடுத்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

கடுமையான வறட்சி காலங்களில் மனிதர்கள் குடியிருப்பு பகுதிக்கு வந்து தண்ணீரை ஒட்டகங்கள் குடித்து விடுவதாகவும் புகார் உள்ளது. இதன் காரணமாக அவற்றை கொல்ல அப்பகுதி மக்கள் முடிவெடுத்துள்ளனர். இந்த ஒட்டகங்களின் கழிவுகள் ஒரு டன் கார்பன்டை ஆக்சைடுக்கு நிகரான, மீத்தேன் வாயுவை உருவாக்குவதாக கூறப்படுகிறது. இது புவி வெப்பமயமாதலுக்கு ஒரு காரணமாக இருப்பதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

Source : தினத்தந்தி