படித்தால் பட்டம், அது அந்த காலம் ; பணம் கொடுத்தால் பட்டம், இது இந்த காலம் !

நம் நாட்டில் தற்பொழுது ஊழல் தலைதூக்கி உள்ளது. அதற்கு உதாரணமாக மதுரை காமராசர் பல்கலைக்கழகம் உள்ளது. கல்வியினால் பணத்தை சம்பாதிப்பது போய், பணத்தால் கல்வி விலைபோய் உள்ளது. இது மிகவும் கண்டிக்கத்தக்கது.

மதுரை காமராசர் பல்கலைக்கழகம், தொலைதூரக் கல்வி இயக்கத்தால், 500க்கும் மேற்பட்டோர்களுக்கு போலி மதிப்பெண் சான்றிதழ் வழங்கியுள்ளதாக லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

2014 – 2017 வரை இந்த ஊழல் நடந்துள்ளது. 500க்கும் மேற்பட்டவர்களுக்கு தேர்வு எழுதாமலேயே தொலைதூரக் கல்வி இயக்ககம் மூலம் ரூபாய் ஒரு லட்சம் கொடுத்து மதிப்பெண் பட்டியல் பெற்றுள்ளனர். இதற்கு கேரளாவில் உள்ள சில மையங்கள் மூலமாக இந்த ஊழல் நடத்தப்பட்டிருக்கலாம் எனவும், இதற்கு மூல காரணம், கூடுதல் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலரான பேராசிரியர் ராஜராஜன் என்று லஞ்ச ஒலிப்புத் துறை குறிப்பிடுகிறது. முதல் கட்ட விசாரணையில், 20 முதல் 50 கோடி ரூபாய் வரை லஞ்சம் பெறப்பட்டிருந்தது தெரிகிறது.

தேர்வே எழுத தேவை இல்லை… பணம் கொடுத்தால் பட்டம் கிடைக்கும்!

துணைவேந்தர் எம்.கிருஷ்ணனிடம் பேசியபோது, ‘‘பல்கலைக்கழகம் சம்பந்தமாக எந்தவிதமான புகார் வந்தாலும், அதை விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறேன். இந்தப் பல்கலைக்கழத்தில் நான் பொறுப்புக்கு வந்த பிறகு, பல நடவடிக்கைகளை எடுத்துவருகிறேன். குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், எவரும் தப்ப முடியாது. உயர் நீதிமன்றத்தின் உத்தரவின்பேரில் அமைக்கப்பட்ட குழுவின் அறிக்கை அடிப்படையிலும், ஊழல் கண்காணிப்புத் துறையினர் நடத்திவரும் விசாரணை முடிவின் அடிப்படையிலும், தவறு செய்தவர்கள்மீது நிச்சயமாக நடவடிக்கை எடுக்கப்படும். நாட்டின் தலைசிறந்த பல்கலைக்கழகமாக மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தை மாற்ற, அனைத்து முயற்சிகளையும் எடுத்துவருகிறேன்’’ என்றார். ஊழல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும்!