தீபாவளிக்கு தரமான இனிப்புகளை தயாரிக்க உணவு பாதுகாப்பு அதிகாரிகள் வேண்டுகோள்!

மக்களின் அன்றாட தேவைகளில் அவசியமானதாக விளங்கும் உணவு மற்றும் உணவு பொருட்களின் தரம் மற்றும் பாதுகாப்பினை உறுதி செய்திட பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. தற்போது பண்டிகை காலம் தொடங்கி உள்ளதால் அனைத்து விதமான விற்பனைகளும் சூடுபிடிக்கத் தொடங்கி உள்ளது. முக்கியமாக தீபாவளி மற்றும் கிறிஸ்துமஸ் போன்ற பண்டிகை காலத்தில் விதவிதமான இனிப்பு பலகாரங்கள், காரங்கள் மற்றும் ‘கேக்’ போன்ற பேக்கரி உணவு பொருட்களை மக்கள் விரும்பி வாங்கி உண்பதும்,சொந்த பந்தங்களுக்கு அளிப்பதும் நமது கலாசாரமாக விளங்கி வருகிறது. இந்நிலையில் தீபாவளிக்கு தரமான இனிப்புகளை தயாரிக்கவும் , அதனை வாங்கும் மக்கள் விழிப்புணர்வுடனும் இருக்க கோவை மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி விஜய லலிதாம்பிகை தெரிவித்து உள்ளார். இது குறித்து அவர் பேசும் போது, தீபாவளி பண்டிகையில் இனிப்பு மற்றும் கார பண்டங்களுக்கு சீட்டு நடத்துபவர்கள் உள்பட அனைத்து தயாரிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்களும் உணவு பாதுகாப்பு துறையில் பதிவு செய்து உரிமம் பெற்று பொதுமக்களுக்கு வினியோகம் செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இனிப்பு மற்றும் பேக்கரி பொருட்கள் தயாரிப்பவர்கள் தரமான மூலப்பொருட்களை கொண்டு சுகாதாரமான முறையில் தயாரித்து பாதுகாப்பான உணவு பொருட்களை மக்களுக்கு வழங்க வேண்டும் என தெரிவித்து உள்ளனர்.  உணவு தயாரிப்பில் கலப்படமான பொருட்களையோ, அனுமதிக்கப்பட்ட அளவிற்கு அதிகமான நிறமிகளையோ உபயோகிக்கக் கூடாது எனவும் அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

பேக்கிங் செய்யப்பட்ட உணவு பொருட்களுக்கு விபரச்சீட்டு இடும்போது அதில் தயாரிப்பாளரின் முழு முகவரி, உணவு பொருளின் பெயர்,தயாரிப்பு அல்லது பேக்கிங் செய்யப்பட்ட தேதி, சிறந்த பயன்பாடு காலம் (காலாவதியாகும் காலம்) சைவ மற்றும் அசைவ குறியீடு ஆகியவற்றை அவசியம் குறிப்பிட வேண்டும் எனவும்  உணவு பொருட்களை ஈக்கள், பூச்சிகள் மற்றும் கிருமி தொற்று இல்லாத சுகாதாரமான சூழலில் பொதுமக்களுக்கு விற்பனை செய்திடல் வேண்டும் எனவும் கூறி உள்ளனர். பொருட்களின் தரம் குறித்து ஆய்வு செய்ய ஐந்து குழுக்கள் கொண்ட அதிகாரிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர்

பண்டிகை காலத்தில் மட்டும் பலகாரங்கள் தயாரிப்பவர்கள் உள்பட அனைத்து தயாரிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்களும் உடனடியாக உணவு பாதுகாப்பு அலுவலகத்தினை தொடர்பு கொண்டு இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டம் 2006-ன் கீழ் தங்களது வணிகத்தினை பதிவு செய்து உரிமம் பெற்று கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.

பொதுமக்களும், பண்டிகை காலங்களில் பலகாரங்கள் வாங்கும் போது, உணவு பாதுகாப்பு துறையில் பதிவு பெற்ற நிறுவனங்களில் மட்டும் வாங்குமாறும், பேக்கிங் செய்யப்பட்ட பொருட்களை விபரச்சீட்டு இருந்தால் மட்டுமே வாங்கி உபயோகிக்குமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இதுதொடர்பான புகார்கள் ஏதும் இருப்பின் மாவட்ட உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாக துறையின் நியமன அலுவலரிடம் தெரிவிக்கலாம். மேலும், பொதுமக்கள் உணவு பொருள் சம்பந்தமாக 94440 42322 என்ற ‘வாட்ஸ் அப்’ எண்ணிற்கும் புகார் தெரிவிக்கலாம் என கூறப்பட்டு உள்ளது. ஆரோக்கியமான தீபாவளியை கொண்டாட அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்பதே உணவு பாதுகாப்பு துறையின் அறிவுரையாக உள்ளது.