கோ-ஆப்டெக்ஸ் சார்பில் கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரியில் கைத்தறி விழிப்புணர்வு

கோ-ஆப்டெக்ஸ் சார்பில், பி.எஸ்.ஜி.ஆர். கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி கல்வி நிறுவனத்தில் கைத்தறி விழிப்புணர்வு முகாம் திங்கட்கிழமை நடைபெற்றது.

கைத்தறி ரகங்கள் பற்றிய விழிப்புணர்வை இளைய தலைமுறையினருக்கு கொண்டு செல்லும் வகையில் கைத்தறித்துறை அமைச்சர் காந்தி சட்டப்பேரவையில் அறிவித்தபடி, கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம், மாநிலம் முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் விழிப்புணர்வு முகாம்களை நடத்தி வருகிறது.

இதன் தொடர்ச்சியாக கைத்தறி தினத்தன்று பி.எஸ்.ஜி.ஆர். கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி கல்வி நிறுவனம், கைத்தறி துறை மற்றும் கோ-ஆப்டெக்ஸ் சார்பாக கைத்தறி பற்றிய விழிப்புணர்வு முகாம் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

இந்த முகாமில் தமிழகத்தில் உற்பத்தி செய்யப்படும் பல்வேறு வகையான பட்டுப் புடவைகள், பருத்திப் புடவைகள், புவிசார் குறியீடு பெற்ற கைத்தறி ரகங்கள், ஹோம் டெக்ஸ்டைல்ஸ் ரகங்கள், நாகரீக பைகள், துப்பட்டாக்கள் போர்வைகள், தலையணை உறைகள் மற்றும் துண்டுகள் முதலிய துணிவகைகள் காட்சிப்படுத்தப்பட்டன. மேலும், மாணவர்களுக்கு கைத்தறியின் சிறப்பினை அறிமுகப்படுத்தும் நோக்கில் கைத்தறி துணிகள் கண்காட்சியும் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் கல்லூரியின் டீன் சாந்தி ராதாகிருஷ்ணன், துறைத் தலைவர்கள் ராதிகா, கற்பகவல்லி, கைத்தறித் துறை உதவி இயக்குனர் சிவக்குமார், கைத்தறி அலுவலர் பொம்மையா சாமி, கோ-ஆப்டெக்ஸ் முதுநிலை மண்டல மேலாளர் நந்தகோபால், மருதம் கோ-அப்டெக்ஸ் விற்பனை மேலாளர் செல்வம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வில் கோ-ஆப்டெக்ஸ் பொது மேலாளர் வாசு, மண்டல மேலாளர் நந்தகோபால், கைத்தறித் துறை உதவி இயக்குனர் சிவக்குமார், துறை சார்ந்த அதிகாரிகள், கோ-ஆப்டெக்ஸ் ஊழியர்கள் மற்றும் கைத்தறி கூட்டுறவு சங்க நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.