மாணவர்களின் வாசிப்புத் திறனை அதிகப்படுத்த நடவடிக்கை மாவட்ட கல்வி அதிகாரி தகவல்.

அரசு பள்ளிகளில் 1-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை படிக்கும் ஒவ்வொரு மாணவர்களிடமும் வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்த நூலக இயக்கம் செயல்பட்டு வருகிறது. இதன் மூலமாக வகுப்புக்கு ஏற்ப பொருத்தமான புத்தகங்களை சுழற்சி முறையில் வாரந்தோறும் மாணவர்களுக்கு வழங்கப்படுவதை உறுதி செய்யப்படுகிறது.

கட்டுரை மற்றும் பேச்சுப்போட்டிகள் மூலம் மாணவர்களின் வாசிப்பு திறனை பகிர்ந்து கொள்கின்றனர். மேலும், மாநில அளவில் அமைக்கப்பட்டுள்ள வல்லுநர் குழு அரசு பள்ளி நூலகங்களுக்கு தேவையான புத்தகங்களை வழங்குகிறது. மேலும், அரசு ெதாடக்கப் பள்ளி, நடுநிலைப்பள்ளி, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் செயல்படும் நூலகங்களுக்கு புத்தகங்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில், தற்போது பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில் தொடக்கப்பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் வாசிப்பு பழக்கத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, பள்ளி வகுப்புகளில் மாணவர்களுக்கு பாடங்கள் வழங்கப்பட்டு அவர்களை ஆசிரியர்கள் வாசிக்க வைத்து வருகின்றனர். தமிழ் மட்டுமின்றி ஆங்கில வாசிப்பு திறனை அதிகரிக்கும் வகையில், ஆங்கில பாடங்கள் மற்றும் கதைகள் மாணவர்களுக்கு அளிக்கப்பட்டு வகுப்பறைகளில் வாசிக்க வைக்கின்றனர்.

சத்தம் போட்டு மாணவர்கள் பாடங்களை வாசிப்பதால், அவர்களின் உச்சரிப்பு திறன் மட்டுமின்றி வாசிப்பு பழக்கமும் மேம்படுவதாக ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.

இது குறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுமதி கூறுகையில், குழந்தைகள் சத்தமின்றி படிக்கும் போது அவர்கள் செய்யும் தவறுகள் தெரிவது இல்லை. வகுப்பறைகளில் சத்தம் போட்டு படிக்கும்போது வார்த்தை உச்சரிப்பு, எழுத் துப்பிழைகள் போன்றவை கண்டறிய முடிகிறது. அந்த தவறை மாணவர்களிடம் சுட்டிகாட்ட முடிகிறது.

இதனால், அவர்களின் வாசிப்பு பழக்கமும் மேம்படுகிறது. தவிர, மாணவர்களின் வாசிப்பு பழக்கத்தை மேம்படுத்த 86 வகையான புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளன. நூலக பிரிவு நேரங்களில் இந்த புத்தகங்களை வாசிக்கின்றனர். இது தொடர்பாக ஆசிரியர்களுக்கும் பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன என்றார்.