கோவையில் பறை இசை மாநாடு.. 1330 பறைகள் ஒரே நேரத்தில் முழங்க உள்ளன..!!!

கோவை: உலகிலேயே முதல் முறையாக பறை இசை மாநாட்டை நிமிர்வு கலையகம் மற்றும் பேரூராதீன கல்வி நிறுவனங்கள் இணைந்து நடத்துகின்றது.

இது தொடர்பான செய்தியாளர் சந்திப்பு கோவை பத்திரிகையாளர் மன்றத்தில் நடைபெற்றது. அப்போது பேரூராதினம் சாந்தலிங்க அடிகளார் கூறியதாவது:

பாரெங்கும் பறை இசை முழங்கிட வேண்டுமென்ற நோக்கத்தோடு, ’நிமிர்வு கலையகம்’ கடந்த 12 ஆண்டுகளாக பறை இசை சார்ந்து உலகம் முழுவதும் கலைப்பணிகளை ஆற்றி வருகிறது.

இக்கலையகம் பறை இசை கற்பிக்க பறை இசைப்பள்ளிகளை உருவாக்கி, கலைஞர்களுக்கு உதவிட ‘மக்கள் உதவிக்குழு’ என்ற திட்டத்தை உருவாக்கி, நூல்கள் மற்றும் களப்பணிகளுக்கு ’பறை ஆய்வு நடுவம்’ என பல்வேறு தளங்களில் இயங்கி வருகிறது.

நிமிர்வு கலையகம் எடுத்த முன்முயற்சியின் காரணமாக பாரதியார் பல்கலைக்கழகத்தில் பேரூர் ஆதின கயிலை குருமணி சமுதாய கல்லூரி வழியாக ‘பறையாட்டக் கலை’ பட்டயப்படிப்புகள் அங்கீகாரப்படுத்தப்பட்டு வகுப்புகள் நடைபெறுகிறது.

இந்த நிலையில் ஆதி தமிழர்களின் இசைக்கருவியான பறையை மக்களிடம் கொண்டு சேர்க்கும் ஒரு முன்முயற்சியாக, நிமிர்வு கலையகம் மற்றும் பேரூராதீன கல்வி நிறுவனங்கள் இணைந்து உலகின் முதல் பறை இசை மாநாடாக ‘உலகப்பொது இசை பறை மாநாடு – 2023’ நடத்துகிறது.

கோவை மாவட்டம் பேரூர் பகுதியில் உள்ள தவத்திரு சாந்தலிங்க அடிகளார் கலை மற்றும் அறிவியல் தமிழ்க்கல்லூரியில் வருகின்ற ஜூன் 18 ம் தேதியன்று காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை இந்த பறை இசை மாநாடு நடைபெறுகிறது.

பறை இசையை அடுத்த தலைமுறையினரிடம் பண்பாட்டு வடிவமாக மட்டுமல்லாமல் ஒரு பயன்பாட்டு இசைக்கருவியாக பழக்கப்படுத்த வேண்டிய தேவை நம்மிடம் உள்ளது.

அதற்கான ஒரு முன்முயற்சியாக 100 க்கும் மேற்பட்ட தொல்லிசை கருவிகள் கண்காட்சி நடத்தப்பட உள்ளது.

பார் எங்கும் உள்ள பறைக்குழுக்களை பொதுமக்களுக்கு அறிமுகம் செய்யவும், நாட்டார் கலைஞர்களுக்கான தமிழ்நாடு அரசின் நலத்திட்ட உதவிகள் பற்றிய தகவல்களை கொண்டு சேர்க்கவும் கண்காட்சி அரங்கில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

சங்க இலக்கியங்களில் மட்டுமில்லாமல், பக்தி இலக்கியங்களிலும் உள்ள பறை இசையைப் பற்றிய குறிப்புகளைக் கொண்ட ‘இறையும், பறையும்’ என்ற நூல் மற்றும் பறை கற்பதற்கான முதல் பாட நூலான ’பறை கற்போம்’ ஆகிய நூல்கள் மாநாட்டில் வெளியிடப்பட உள்ளது.

பறையை அறிவார்ந்த சமூகத்திற்கு எடுத்து செல்லும் நோக்கத்தில் கருத்தரங்குகள் மூத்த ஆய்வாளர்கள் மற்றும் பறை களப்பணியாளர்களைக் கொண்டு நடத்தப்படுகிறது.

உலகப் பொதுமறை திருக்குறள் போல, அனைத்து மக்களுக்குமான பொது இசையாக உள்ள பறை இசையை உலகப்பொது இசை என்றழைக்கலாம்.

அதன் சிறப்பை எடுத்துரைக்கும் வகையில் ’1330 திருக்குறள் பறைப்படை’ என்ற பெயரில் 1330 பறைகளை ஒரே இடத்தில், ஒரே நேரத்தில் முழங்கிட உள்ளது.

தென்மாவட்டங்கள், கிராமப்புற பகுதிகள் மற்றும் பழங்குடி மக்களிடமும் உள்ள இசைக்கருவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது.

பறைக் கலைஞர்களை பெருமிதப்படுத்தும் வகையில் பறைக்காக பணி செய்த கலைஞர்கள், எழுத்தாளர்கள், அமைப்பினருக்கு கலையக விருதுகள் வழங்கப்பட உள்ளது.

இந்த விழாவில் கலந்து கொள்ளும் தமிழ்நாடு அரசின் அமைச்சர் பெருமக்கள் விருதுகளை வழங்கி கெளரவிக்க உள்ளனர்.

சிறப்பு வாய்ந்த இந்த மாநாட்டில் தமிழ்நாடு முழுவதும் உள்ள பறைக் கலைஞர்களும், சான்றோர் பெருமக்களும், அரசு அதிகாரிகளும் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர். உலகம் முழுவதும் உள்ள பறைக்குழுக்களின் பிரதிநிதிகள் இந்த மாநாட்டில் கலந்து கொள்கின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்