கோவையில் வ.உ.சிதம்பரனாரின் முழு உருவ சிலை திறப்பு

கோவை: கோவை வ.உ.சி மைதானத்தில் வ.உ.சிதம்பரனாரின் முழு உருவ சிலையை இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

கோவை வ.உ.சி மைதானத்தில் 50 அடி நீளம், 45 அடி அகலம் கொண்ட 5 சென்ட் இடம் ஒதுக்கப்பட்டு வ.உ.சிதம்பரனருக்கு சிலை அமைக்கும் பணி தொடங்கியது. இதற்காக செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் ரூ.40 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

வ.உ.சி. மைதானத்தில் பீடம் அமைக்கப்பட்டு 7 அடி உயரத்தில் வ.உ.சிதம்பரனாருக்கு முழு உருவ வெண்கல சிலை அமைக்கும் பணிகள் கடந்த பிப்ரவரி மாதம் துவங்கியது. இதன் பணிகள் முழுமையாக முடிவடைந்ததையொட்டி, இந்த சிலையை சென்னை தலைமை செயலகத்தில் இருந்து முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் இன்று திறந்து வைத்தார்.

இந்த சிலை திறப்பு விழாவில், கோவை மாவட்ட கலெக்டர் கிராந்தி குமார் பாடி, மாநகராட்சி மேயர் கல்பனா, மாநகராட்சி கமிஷனர் மு.பிரதாப், போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் மற்றும் கவுன்சிலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

அவர்கள் புதிதாக திறக்கப்பட்ட வ.உ.சி. சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். இதைத் தொடர்ந்து பல்வேறு அமைப்பினர் வ.உ.சி. மைதானத்தில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்தும், மலர் தூவியும் மரியாதை செலுத்தினர்.