அபார்ட்மென்ட்டில் புகுந்த கண்ணாடி விரியன் பாம்பு

கோவை நஞ்சுண்டாபுரம் சாலையில் உள்ள பார்சன் அபார்ட்மென்ட்டில் 5 அடி உயரமுள்ள பெரிய கண்ணாடி விரியன் பாம்பு புகுந்ததால் அங்கு பரபரப்பு நிலவியது.

இன்று காலை 4.30 மணியளவில் அபார்ட்மென்ட் நுழைவு வாயில் பகுதியில் செக்யூரிட்டி 5 அடி நீளமுள்ள பாம்பை கண்டுள்ளார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர், உடனடியாக அபார்ட்மென்ட்டின் தலைவர் முருகனுக்கு தகவல் கொடுத்துள்ளார்.

பின்னர் பிரபல பாம்பு பிடிக்கும் ஸ்னேக் சஞ்சய் என்பவருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இந்த பாம்பு மிகவும் அதிக சத்தம் எழுப்பியதாகவும், அருகில் இருந்த புதர் போன்ற இடத்தில் இருந்து வந்திருக்கலாம் என்றும் குடியிருப்பு வாசிகள் கூறுகின்றனர். மேலும் கர்ப்பமாக இருந்த இப்பாம்பை நேரடியாக கையில் பிடிக்க முடியாமல் இருந்தது. அதோடு இதன் அருகிலும் யாராலும் செல்ல முடியவில்லை.

தொடர்ந்து, ஸ்னேக் சஞ்சய் பாம்பு பிடிக்கும் உபகரணங்கள் கொண்டு அதனை பத்திரமாக பிடித்து, காட்டுப்பகுதியில் விட்டுவிட்டார்.