புனித ஹஜ் பயணம்: ஆன்லைனில் விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

புனித ஹஜ் பயணத்திற்கு விண்ணப்பிக்க மார்ச் 20-ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், ஹஜ் பயணத்திற்கு ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கும் தேதி மார்ச் 20-ஆம் தேதி வரை நீட்டப்பட்டுள்ளது. மேலும் இந்திய ஹஜ் குழுவின் இணையதளத்தின் மூலமாகவோ அல்லது ஹஜ் குழுவின் செயலி மூலமாகவோ இந்த விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து கொள்ளலாம்.

அதேபோல் மார்ச் 20-ஆம் தேதி அன்றோ அல்லது அதற்கு முன்பாகவோ கடவுச்சீட்டு பெற்றிருக்க வேண்டும். இதனையடுத்து பிப்ரவரி மூன்றாம் தேதி வரை கடவுச்சீட்டின் செல்லத்தக்க காலம் இருக்க வேண்டும். மேலும் கூடுதல் விவரங்கள் அறிய விண்ணப்பதாரர்கள் இந்திய ஹஜ் குழு இணையதள முகவரி (www.hajcommittee.gov.in)-ஐ தொடர்பு கொள்ளலாம் என அதில் கூறப்பட்டுள்ளது.