எங்கு போய் நட்பை தேடுவேன்! – இயக்குநர் செல்வராகவன் ட்விட்டரில் வருத்தமான பதிவு

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராக வலம் வருபவர் செல்வராகவன். தனுஷ் நடிப்பில் வெளியான துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகம் ஆன இவர், அதன் பிறகு காதல் கொண்டேன், 7 ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன் என தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்தார். அவரது படக்களுக்கு என தனி ரசிகர் பட்டாளமே உருவானது. தனுஷ் நடித்த ‘நானே வருவேன்’ படத்தை கடைசியாக இயக்கியிருந்தார்.

இதனிடையே நடிப்பிலும் கவனம் செலுத்தி வரும் இவர், முதன்மை கதாபாத்திரத்தில் நடித்த ‘பகாசூரன்’ சமீபத்தில் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றது.

இயக்குநர் செல்வராகவன் அடிக்கடி ட்விட்டரில் தனது அனுபவம் குறித்தும், பல நேரங்களில் துன்பத்தில் இருப்பவர்களுக்கு கைக்கொடுக்கும் விதமாகவும் கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்.

இந்த நிலையில் தற்போது நண்பர்கள் குறித்து ஒரு பதிவை பதிவிட்டுள்ளார். அதில், “அனுபவத்தில் சொல்கிறேன். நல்ல நண்பர்களை மட்டும் இழந்து விடாதீர்கள். எனக்கு நண்பர்களே கிடையாது. 23 வருடங்களாய் வேலையை தவிர எதையும் யோசித்ததில்லை. இன்று நண்பர்களுடன் ஆனந்தமாய் இருப்பவர்களை பார்த்தால் பொறாமையாய் உள்ளது. எங்கு போய் நட்பை தேடுவேன்” என பதிவிட்டுள்ளார்.