குரங்கணி, கொடைக்கானல் உள்ளிட்ட மலைப்பகுதிகளில் காட்டுத் தீ

தேனி மாவட்டம் போடி அருகே உள்ள குரங்கணி மலைப்பகுதியில் நேற்று அதிகாலை காட்டுத்தீ பற்றி எரிந்தது. இந்த தீ, புலியூத்து வனப்பகுதியில் இருந்து ஹெவிகுண்டு என்னும் மலைப்பகுதியில் சுமார் 6 கிலோ மீட்டர் தூரத்திற்கு பற்றி எரிந்தது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படையினர் மற்றும் வனத்துறையினர் இ்ணைந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் போதிய உபகரணங்கள் இல்லாததால் தீ அணைப்பு பணியில் தொய்வு ஏற்பட்டது. சுமார் 7 மணி நேரம் தண்ணீரை அடித்து தீயை அணைத்தனர்.

இந்த பகுதியில் தொடர்ந்து காட்டுத்தீ பற்றி எரிவதால் வனவிலங்குகள் பாதிக்கப்படும் சூழல் உள்ளது. காட்டுத்தீயால் இப்பகுதியில் உள்ள மா, இலவம் மரங்கள், பாக்கு மரங்கள் போன்றவை பாதிக்கப்பட்டு வருவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். கோடை காலங்களில் இது போல் வனப்பகுதியில் பற்றி எரியும் தீ இப்பகுதி மக்களுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளது.

மேலும், இதன் அருகே உள்ள கொலுக்கு மலையில் கடந்த 3 வருடத்துக்கு முன்பு ஏற்பட்ட தீ விபத்தில் 22 பேர் தீயில் கருகி உயிரிழந்தனர். அதுபோன்ற சூழல் ஏற்படுவதற்குள் தீயை அணைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பாக காட்டுத்தீ பரவும் காலங்களில் நவீன உபகரணங்கள் அல்லது ஹெலிகாப்டர் உதவியுடன் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கொடைக்கானல் மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாக பகல் நேரங்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்து உள்ளது. இதன் காரணமாக மலைப்பகுதியில் உள்ள செடி, கொடிகள், புல்வெளி பகுதிகள் காய்ந்தும், கருகியும் வருகின்றன. அவ்வாறு காய்ந்துபோன செடி, கொடிகள் மற்றும் மரங்கள் தீப்பிடித்து எரியும் சம்பவங்கள் அவ்வப்போது நிகழ்ந்து வருகிறது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு கொடைக்கானல் மலைப்பகுதிகளில் ஆங்காங்கே வனப்பகுதி மற்றும் தனியார் தரிசு நிலங்கள், வருவாய்த்துறைக்கு சொந்தமான நிலங்களில் அடுத்தடுத்து தீப்பற்றி எரிந்தது. இருப்பினும் வனத்துறையினர் விரைந்து செயல்பட்டு, தீ மேலும் பரவாமல் தடுத்து அணைத்தனர்.