மனம் திருந்திய கஞ்சா குற்றவாளி: மறுவாழ்வு ஏற்படுத்தி கொடுத்த கோவை காவல்துறை

மனம் திருந்திய கஞ்சா குற்றவாளிக்கு மறுவாழ்வு ஏற்படுத்தி கொடுக்கும் வகையில் பெட்டிக்கடை வைத்து கொடுத்து கோவை மாவட்ட காவல்துறையினர் உதவியுள்ளனர்.

கோவை பெரியநாயக்கன்பாளையம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் சில வருடங்களுக்கு முன்பு கஞ்சா விற்பனை செய்து வந்த பெண் ஒருவர் மீது கஞ்சா விற்பனை வழக்கு இருந்து வந்தது. தற்பொழுது கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக மனம் திருந்தி கஞ்சா விற்பனையில் ஈடுபடாமல் கிடைக்கின்ற வேலையை செய்து வாழ்ந்து வருகிறார்.

இந்நிலையில் தமிழ்நாடு முதலமைச்சரின் போதை பொருட்களுக்கு எதிரான நடவடிக்கையின் ஒரு பகுதியாகவும் போதை இல்லா தமிழ்நாட்டை உருவாக்கும் முயற்சியின் ஒரு பகுதியாகவும் மனம் திருந்திய கஞ்சா வழக்கு குற்றவாளிக்கு மறுவாழ்வை ஏற்படுத்திக் கொடுக்கும் வகையில் மேற்கு மண்டல ஐஜி சுதாகர் மற்றும் கோவை சரக காவல்துறை துணை தலைவர் விஜயகுமார், கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் அறிவுறுத்தலின்படி 25 ஆயிரம் மதிப்புள்ள பெட்டிக்கடை ஒன்று வைத்து கொடுக்கப்பட்டுள்ளது.

பெரியநாயக்கன்பாளையம் உட்கோட்டத் துணை காவல் கண்காணிப்பாளர் நமச்சிவாயம், பெரியநாயக்கன்பாளையம் காவல் ஆய்வாளர் மற்றும் காவல் துறையினரின் முயற்சியில் தன்னார்வலர்களின் உதவியுடன் அப்பெண்ணிற்கு பெட்டிக்கடை வைத்து கொடுக்கப்பட்டுள்ளது.

அவர் மீண்டும் எவ்வித சட்டவிரோதமான செயல்களில் ஈடுபடாமல் நல்வழியில் செல்ல வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்த பெரியநாயக்கன்பாளையம் காவல்துறையினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் வெகுவாக பாராட்டினார்.