நான்கு சக்கர வாகனங்களில் பயன்படுத்தும் வகையில் எளிய வடிவிலான குப்பை தொட்டியை அறிமுகப்படுத்தி காவல்துறைக்கு வழங்கிய யங் இந்தியா அமைப்பு.
யங் இந்தியா என்ற தன்னார்வ அமைப்பு அரசுடன் இணைந்து பல்வேறு சமூக சேவைகளை செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. அதன்படி நான்கு சக்கர வாகனங்களில் பயன்படுத்துகின்ற வகையில் எளிய வடிவிலான குப்பை தொட்டியை அறிமுகப்படுத்தி முதல் கட்டமாக கோவை மாநகர காவல் துறைக்கும் பொதுமக்களுக்கும் வழங்கி உள்ளது. பயணங்கள் மேற்கொள்ளும் போது குப்பைகளை சாலைகளில் வீசாமல் இருப்பதற்காக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வண்ணம் இந்த முயற்சியை யங் இந்தியா அமைப்பு முன்னெடுத்துள்ளது.
முதல் கட்டமாக கோவை மாநகரில் உள்ள பல்வேறு காவல் நிலைய வாகனங்கள், ரோந்து வாகனங்கள், பொதுமக்கள் வாகனங்களுக்கு இந்த குப்பை தொட்டிகள் வழங்கப்பட்டு விழிப்புணர்வு துவங்கப்பட்டுள்ளது. இதனை கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் வழங்கி துவக்கி வைத்தார். மேலும் இதர அரசு வாகனங்கள் ஆட்டோக்களில் விரிவுபடுத்த இந்த அமைப்பு திட்டமிட்டுள்ளது.
இந்நிகழ்வில் உரையாற்றிய மாநகர காவல் ஆணையர், யங் இந்தியா அமைப்பின் இந்த முயற்சி வரவேற்கத்தக்கது எனவும், இதனை வழங்கிய யங் இந்தியா அமைப்பினருக்கு தனது நன்றிகளை தெரிவித்துக் கொள்வதாகவும் கூறினார்.