அவினாசி சாலை மேம்பால தூணில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள் அகற்றம்

கோவை அவினாசி சாலையில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தவும் போக்குவரத்து வசதிக்காகவும் உயர்மட்ட மேம்பாலம் அமைக்கப்படுகிறது. 10.10 கி.மீ நீளத்தில் ரூ.1,621.30 கோடி மதிப்பில் கோல்டு வின்ஸ் முதல் உப்பிலிபாளையம் வரை உயர்மட்ட மேம்பாலம் அமைக்கப்படுகிறது.

தற்போது பாலத்திற்கான தாங்கு தூண்கள் அமைக்கப்பட்டு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கோல்டு வின்சிலிருந்து விமான நிலையம் வரை தாங்கு தூண்களில் ஓடுதளம் அமைக்கும் பணி விரைந்து நடைபெற்ற வருகிறது.

இந்த நிலையில் மாநகராட்சி சுவர் விளம்பரங்களை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. முதல் கட்டமாக காந்திபுரத்தில் உயர்மட்ட மேம்பால சுவரொட்டிகள் அகற்றப்பட்டு தமிழர்களின் பாராம்பரியத்தை எடுத்துரைக்கும் வகையில் ஓவியங்கள் வரையப்பட்டு வருகிறது.

இதன் அடுத்தப்படியாக அவினாசி மேம்பால தூண்களிலும் சுவரொட்டிகள் அகற்றும் பணியை மாநகராட்சி தீவிரமாக செய்து வருகிறது. மேலும் நாளை (பிப்ரவரி 18) ஜனாதிபதி கோவை வர உள்ளார். இதனால் தூண்களில் தண்ணீரை பீச்சி அடித்து சுத்தம் செய்து வருகின்றனர்.