ஸ்ரீ கிருஷ்ணா கல்லூரியில் மேலாண்மை விழா

கோவைப்புதூர் ஸ்ரீ கிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியின் ஸ்கூல் ஆஃப் மேனேஜ்மென்ட் மற்றும் குனியமுத்தூரில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் மேலாண்மை துறை இணைந்து இளங்கலை மற்றும் முதுகலை மாணவர்களுக்கு மேலாண்மை விழாவை நடத்தியது.

இதில் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. மேலாண்மை பிரிவு மாணவர்கள், நிர்வாக மனப்பான்மையை வெளிக்கொண்டு வருவது, மேலாண்மை மாணவர்களை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் இம்மேலாண்மை விழா நடத்தப்பட்டது.

கோவை ஆர்.எம்.சி.எஸ்.எல்.எல்.பி நிறுவனர் மற்றும் நிர்வாக பங்குதாரர் ஹரிராம் விழாவை துவக்கி வைத்து பேசுகையில், வெற்றி பெறுவது முக்கியமல்ல. தோல்வியில் இருந்து கற்றுக்கொள்ளுங்கள். தோல்வி பல புதிய யோசனைகள், உத்திகள், வெற்றி மற்றும் நிலை நிறுத்துவதற்கான வழிகளை வழங்குகிறது.

மாணவர்கள் சீரானவர்களாகவும் கடின உழைப்பாளிகளாகவும் இருக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். தொழில்துறைக்கு விசுவாசமான மற்றும் திறமையான பணியாளர்கள் தேவை. வேலைச்சந்தையில் நிறுவனம் எதிர்பார்க்கும் அறிவு மற்றும் திறன்களை வளப்படுத்துவதுடன், மாணவர்களிடம் நேர்மறை மனப்பான்மையை வளர்த்துக்கொள்ளுமாறு பேசினார்.

கோவை மற்றும் அதைச்சுற்றியுள்ள 25 கல்லூரிகளைச் சேர்ந்த சுமார் 400 மாணவர்கள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர். இளங்கலைக்கான 5 நிகழ்வுகள் மற்றும் முதுகலைக்கான 5 நிகழ்வுகள் நடத்தப்பட்டன. விழாவில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. ஒட்டுமொத்த கோப்பையை குமரகுருலிபரல் ஆர்ட்ஸ் யுஜி மாணவர்களும், எம்பிஏ வுக்கான கோப்பையை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக எம்பிஏ மாணவர்களும் வென்றனர்.

இக்கல்லூரியின் முதல்வர் ஜெகஜீவன் தலைமை வகித்தார். ஸ்ரீ கிருஷ்ணா கல்வி நிறுவனங்களின் முதன்மை நிர்வாக அதிகாரி சுந்தரராமன் வாழ்த்துரை வழங்கினார்.

ஸ்ரீ கிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியின் ஸ்கூல் ஆஃப் மேனேஜ்மென்ட் துறைத்தலைவர் நிர்மலா தேவி, மேலாண்மை அறிவியல் டீன் ராஜன், துறைத் தலைவர் ஜூலியன் ஞான தாஸ், பேராசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பலர் விழாவில் பங்கேற்றனர்.