தமிழ்நாடு, தமிழகம் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த ஆளுநர் ரவி

சமீபத்தில் சென்னை உள்ள ஆளுநர் மாளிகையில் காசி தமிழ் சங்கம் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தவர்களைச் சிறப்பிக்கும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு தன்னார்வலர்களைப் பாராட்டினார். மேலும் விழா மேடையில் பேசும்போது, “தமிழ்நாடு என்பதை விட தமிழகம் என்று சொல்வதுதான் சரியாக இருக்கும்” எனக் கூறியிருந்தார்.

இதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் எதிர்ப்புகள் கிளம்பி, விவாதப் பொருளாக பேசப்பட்டு வந்தது. மேலும் சட்டமன்றத்தில் ஆளுநர் நடந்துகொண்ட விதத்திற்கும் கண்டனங்கள் வலுத்தன.

இந்த நிலையில், காசி மற்றும் தமிழ்நாட்டிற்கு இடையேயான தொடர்பை குறிக்கவே தமிழகம் என்ற வார்த்தையை பயன்படுத்தியதாக ஆளுநர் ரவி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பது: “2023 ஜனவரி 4-ஆம் தேதி அன்று ஆளுநர் மாளிகையில், சமீபத்தில் நிறைவடைந்த “காசியுடன் தமிழ் மக்களின் பழமையான கலாசார தொடர்பை கொண்டாடும்” ஒரு மாத காசி – தமிழ் சங்கமம் விழாவில் பங்கேற்ற தன்னார்வ தொண்டர்களைப் பாராட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.

அந்நிகழ்வில் வரலாற்றுப் பண்பாடு பற்றிப் பேசும் போது, காசி மற்றும் தமிழ்நாட்டுக்கும் இடையே உள்ள தொடர்பை குறிக்க, ‘தமிழகம்’ என்ற வார்த்தையைப் பயன்படுத்தினேன். அந்தக் காலத்தில் ‘தமிழ்நாடு’ என்பது இருக்கவில்லை. எனவே வரலாற்றுப் பண்பாட்டுச் சூழலில், ‘தமிழகம்’ என்பதை ‘மிகவும் பொருத்தமான வெளிப்பாடு’ என்ற கண்ணோட்டத்தில் குறிப்பிட்டேன்.

எனது கண்ணோட்டத்தை ‘தமிழ்நாட்டின் பெயரை மாற்றுவதற்கான பரிந்துரை போல’ பொருள் கொள்வதோ அனுமானம் செய்து கொள்வதோ தவறானது மற்றும் யதார்த்தத்துக்கு புறம்பானது என்று தெரிவித்துக் கொள்கிறேன்.”

எனது பேச்சின் அடிப்படை புரியாமல், ஆளுநர் ‘தமிழ்நாட்டின் பெயரை மாற்றுவதற்கான பரிந்துரை’ எனும் வாதங்கள், விவாதப்பொருளாகி இருக்கிறது. அதற்கு முற்றுப்புள்ளி வைக்கவே இந்த விளக்கம் என தெரிவித்துள்ளார்.