திமுக கூட்டணியில் கமல்?

தமிழகத்தின் பிற கட்சிகள் போலவே ம.நீ.ம.வும் மக்களவைத் தேர்தல் குறித்து டிச.17 இல் சென்னை ஆழ்வார்பேட்டையில் ஆலோசனை நடத்தியது. கூட்டத்துக்குப்பின் செய்தியாளர்களிடம் பேசிய ம.நீ.ம. தலைவர் கமல், கூட்டணி குறித்த கேள்விக்கு, எந்த திசையை நோக்கி நான் சென்று கொண்டிருக்கிறேன் என்பது உங்களுக்கு விரைவில் புரியவரும். என் பயணத்தை பார்த்தாலே புரியும் என்றார்.

பின்னர், தில்லிக்குச் சென்ற கமல், ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தில் பங்கேற்று தனது ஆதரவை தெரிவித்தார். அங்கே பேசும்போது, ராகுல் காந்தி, நேருவின் கொள்ளுப் பேரன். நான் பிற இந்திய குடிமகன்கள் போல காந்தியின் கொள்ளுப்பேரன். நாங்கள் இருவரும் இந்தியாவின் கொள்ளுப்பேரன்கள்.

எனது தந்தையும் காங்கிரஸ் தொண்டர் தான். நான் பலவிதமான அரசியல் சித்தாந்தங்களைப் பற்றியும் அறிந்துகொண்டேன். பின்பு அரசியல் கட்சி தொடங்கினேன். இந்த யாத்திரையில் ராகுலுடன் நடப்பது அரசியல் அடையாளம் அல்ல. இந்திய அரசமைப்பு சட்டத்துக்கு நெருக்கடி வந்தால் வீதியில் இறங்கி போராடுவேன். தேசிய ஒற்றுமை பயணத்தில் இரண்டு கொள்ளுப் பேரன்கள் இணைந்து நடக்கிறோம் என்று தான் இதை பார்க்க வேண்டும் என்றார்.

இந்த வரிகளை படித்துவிட்டு சென்னையில் கமல் தெரிவித்த பதிலை பொருத்திப் பார்த்தால் அவர் எந்த திசையை நோக்கி நகர்கிறார் என்பதற்கான விடை கிடைத்துவிடும். கமல் கூறியது போலவே, ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் அவரது தந்தை சீனிவாச ஐயங்கார் பாரம்பரியமிக்க காங்கிரஸ் தியாகியாக திகழ்ந்தவர். சிறைவாசம் அனுபவித்த அவரது குடும்பம் கட்சியில் எவ்வித பதவி சுகத்தையும் அனுபவித்ததில்லை. இந்திரா காந்தி கைது செய்யப்பட்டபோது சரண் சிங் கொடும்பாவியை எரித்தவர். நேரு குடும்பத்துடன் தந்தை கால உறவை கமலும் தொடர்கிறார் என்பது புரிகிறது.

ஏற்கனவே, மம்தா பானர்ஜி, அரவிந்த் கெஜரிவால், கேரள முதல்வர் பினராயி விஜயன் உள்ளிட்டோருடன் நெருங்கிய நட்பில் இருந்த கமல், ராகுல் காந்தியின் நடைபயணத்துக்கு நேரடியாகச் சென்று ஆதரவு தெரிவிக்கிறார் என்றால் இதற்கு பின்னால் அரசியல் கணக்கு இல்லை என்பதை முற்றிலும் மறுக்க இயலாது.

காங்கிரஸ் மூலம் திமுக கூட்டணியை நோக்கி நகரும் முடிவை கமல் எடுத்துவிட்டார் என்பதும், ஏற்கனவே அமைச்சர் உதயநிதியுடன் சினிமா வர்த்தக ரீதியாக நெருங்கிய நட்புடன் திகழும் கமலை கூட்டணிக்குள் கொண்டுவர திமுகவும் பச்சைக்கொடி காட்டிவிட்டதாகவே தகவல்கள் தெரிவிக்கின்றன. காரணம், பாமக போல எதிர்ப்பு வாக்குகள் இல்லாத கட்சியாக ம.நீ.ம. இருப்பதாலும், கொங்கு மண்டலம் மற்றும் தென்சென்னை மக்களவைத் தொகுதிக்குள் ம.நீ.ம. வாக்குகள் திமுக கூட்டணிக்கு கூடுதல் பலமாக இருக்கும் என திமுக கணக்குப்போட்டுள்ளது.

கடந்த மக்களவைத் தேர்தலில் ம.நீ.ம. வடசென்னை தொகுதியில் 10.8 சதவீதம், தென்சென்னையில் 12 சதவீதம், மத்திய சென்னையில் 11.7 சதவீதம், ஸ்ரீபெரும்புதூரில் 10 சதவீதம், திருப்பூரில் 5.8 சதவீதம், கோவையில் 11.6 சதவீதம், பொள்ளாச்சியில் 5.5 சதவீதம், மதுரையில் 8.3 சதவீதம், விருதுநகரில் 5.3 சதவீதம் என கணிசமான வாக்குகளை பெற்றிருக்கிறது.

மக்களவையில் ம.நீ.ம. 15 லட்சத்து 75 ஆயிரத்து 324 வாக்குகள் (3.71 சதவீதம்) பெற்றது அரசியல்வாதிகளின் புருவத்தை உயர்த்தியது. ஆனால், அடுத்து வந்த பேரவைத் தேர்தலில் சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி, பாரிவேந்தரின் இந்திய ஜனநாயக கட்சி ஆகியவற்றுக்கு பலத்தை மீறி தொகுதிகளை வாரி வழங்கியது தேர்தல் களத்தில் கேலிகூத்தாக கருதப்பட்டதுடன், அதுவே தவறான வியூகமாகவும் மாறி ம.நீ.ம.வின் வாக்கு வங்கி 2.5 சதவீதமாக சுருங்கியது.

இருந்தாலும், பேரவைத் தேர்தலில் ம.நீ.ம.வுக்கு கிடைத்த வாக்குகளை மக்களவைத் தொகுதி ரீதியாக கணக்கிட்டால் கோவை, பொள்ளாச்சி, திருப்பூர், ஈரோடு, சேலம், சிதம்பரம், தென்சென்னை, மதுரை ஆகிய 9 மக்களவைத் தொகுதியில் திமுக, அதிமுக கூட்டணி இடையே வெற்றித்தோல்வியை நிர்ணயிக்கும் வாக்குகளாக உள்ளன.  எனவே, தான் ம.நீ.ம.வை கூட்டணிக்குள் சேர்த்துக்கொள்வதை திமுகவும் பலமாகவே பார்க்கிறது.

திமுக கூட்டணியில் காங்கிரஸ் தவிர பிற கட்சிகள் ஒரு சதவீதத்துக்கும் குறைவான வாக்குகளையே வைத்திருப்பதால் அங்கு சென்றால் மூன்றாவது இடத்தை ம.நீ.ம.வால் பெற முடியும். தனி சக்தி என்ற அடையாளத்துடன் தொடங்கப்பட்ட ம.நீ.ம. இப்போது தொடர் தோல்வி வளையத்தில் இருப்பதாலும், குறைந்த வாக்கு வங்கியே வைத்திருப்பதாலும், எதிர்வரும் மக்களவைத் தேர்தலில் கூட்டணி சக்தியாக மாற வேண்டிய நிர்பந்தம் உருவாகியுள்ளது.

கமலை பொறுத்தவரை தொடக்கத்திலேயே மய்யக்கொள்கை என பேசி வந்தாலும் வலதுசாரி கொள்கையுடைய பாஜகவுக்கு நேர் எதிர் கருத்துக்களை பேசிவந்தார். அதேநேரத்தில் ராகுல் காந்தி, கேரள முதல்வர் பினராயி விஜயன் உள்ளிட்டோருடன் நெருங்கிய நட்பை தொடர்ந்து வந்தார்.  இந்நிலையில், தமிழகத்தில் திமுக, காங்கிரஸ் கூட்டணியை நோக்கி நகரத் தொடங்கியுள்ளார் என்பதையே கமலின் தில்லி பயணம் உணர்த்துகிறது.  மய்யத்தில் இருந்து இடது நோக்கி நகர்கிறது ம.நீ.ம.

காங்கிரஸ் தொகுதிகள் குறையுமா?

இது குறித்து அரசியல் விமர்சகர் ரிஷி கூறும்போது, திமுக கூட்டணியை பொறுத்தவரை எதிர்கட்சி கூட்டணியில் ஒற்றுமை இல்லாத நிலையில், புதிய கட்சிகள் இன்றி, இருக்கும் கட்சிகளை வைத்துக்கொண்டே மக்களவைத் தேர்தலை சந்திக்க முடியும். இந்த முறை திமுக அதிக தொகுதிகளில் போட்டியிட ஆர்வம் காட்டி வரும் நிலையில் கூட்டணி கட்சிகளுக்கான தொகுதிகளின் எண்ணிக்கை குறைக்கப்படக்கூடும் என்ற தகவல் ஏற்கனவே உலா வருகிறது.

காங்கிரஸின் செல்வாக்கு தேசிய அளவில் சரிந்து வரும் நிலையில் காங்கிரஸின் தொகுதிகள் இந்தமுறை நிச்சயம் குறைக்கப்படலாம். ராகுல் காந்தி மூலம் கூட்டணிக்குள் வர தயாராகும் கமலுக்கு, திமுக கூட்டணியில் கடந்த முறை காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்ட 10 தொகுதிகளில் 2 அல்லது மூன்று தொகுதிகளை பிரித்து திமுக கொடுக்க வாய்ப்புள்ளது.

தமிழகத்தில் ஒரு கட்சியிடம் 2.5 சதவீத வாக்குகள் இருக்கிறது என்றால் அது வெற்றித்தோல்வியை நிர்ணயிக்கும் சக்தியுடன் கூடியது. திமுக கூட்டணிக்குள் கமல் சென்றால் கொங்கு மண்டலம், சென்னை மண்டலம் பகுதிகளில் திமுக கூட்டணியின் பலம் மேலும் அதிகரிக்கும். கமலும் வெற்றிப்பாதையில் பயணிக்க முடியும். தமிழகத்தில் பெரும்பாலான  கட்சிகள் மோடி எதிர்ப்பு என்ற புள்ளியை வைத்து தான் அரசியல் செய்கின்றன. கமலும் அதற்கு விதிவிலக்கல்ல என்றார் ரிஷி.