மேட்டுப்பாளையம் அருகே பள்ளி சுற்றுச்சுவரை இடித்த காட்டு யானை கூட்டம்

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் தேக்கம்பட்டி அருகே உள்ள தாசம்பாளையத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது.

இந்த பள்ளியில் 75 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். தற்போது அரையாண்டு தேர்வு முடிந்து பள்ளிகள் விடுமுறை விடப்பட்டு உள்ளது. இதனால் கடந்த 6 நாட்களாக பள்ளி விடுமுறையில் உள்ளது .

இந்நிலையில் இன்று அதிகாலை அந்தப் பகுதிக்கு வந்த காட்டு யானை கூட்டம் பள்ளியின் சுற்றுச்சுவர் மற்றும் முன்பக்க கதவுகளை உடைத்து சேதப்படுத்தியது. பின்னர் யானைகள் அப்பகுதியில் உள்ள கணேசன் என்பவரது தோட்டத்தில் நுழைந்து தென்னை மரங்களையும் சேதப்படுத்தியது.

தொடர்ந்து இப்பகுதியில் காட்டு யானைகள் உலா வருவதால் அப்பகுதி பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். எனவே வனத்துறையினர் நடவடிக்கை எடுத்து காட்டு யானைகளை வனத்துக்குள் விரட்ட வேண்டும் என்று கோரிக்கை வைத்து வருகின்றனர்.