குமரகுரு கல்லூரியில் உலக உணவுப் பரிசை பெற்றவருக்கு பாராட்டு விழா

“உணவு மற்றும் விவசாயத்திற்கான நோபல் பரிசு” என்றழைக்கப்படும் உலக உணவுப் பரிசை 2022 ஆம் ஆண்டு பெற்ற மூத்த விஞ்ஞானி கோவிந்தராஜ் அவர்களுக்கு, குமரகுரு வேளாண்மை கல்லூரியின் தாளாளர் பிரகாஷ் முன்னிலையில் பாராட்டு விழா நடைபெற்றது.

ஹார்வெஸ்ட் பிளஸ், பயோவர்சிட்டி இன்டர்நேஷனல் மற்றும் சி.ஐ.ஏ.டி கூட்டணியில் பயிர் மேம்பாட்டு துறையின் மூத்த விஞ்ஞானியாக உள்ள இவர், இந்தியா மற்றும் ஆப்பிரிக்காவில் உயிரி வலுவூட்டப்பட்ட பயிர்கள், குறிப்பாக முத்து தினை குறித்த ஆராய்ச்சிக்காகவும், அவரது சிறந்த தலைமைத்துவத்திற்காகவும் அங்கீகரிக்கப்பட்டுள்ளார்.

விவசாயப் பின்னணியில் இருந்து வரும் கோவிந்தராஜ், உயிர்ச் செறிவூட்டப்பட்ட பயிர்களின் மூலம், கிராமப்புற சமூகங்களின் ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கியத்தை ஊக்குவிக்க முடியும் என்பதை நேரடியாக நிரூபித்துள்ளார்.

பயிர்களை பல்வகைப்படுத்துவதன் முக்கியத்துவங்கள், ஊட்டச்சத்து மேம்பாட்டு உத்திகள், செறிவூட்டப்பட்ட பயிர் ரகங்கள் ஆகிய எண்ணற்ற ஆய்வுகளை குறிப்பிட்டும், எளிய கிராமத்தில் பிறந்து, சர்வதேச சாதனையை எட்டி இருக்கும் அவரது ஈர்க்கக்கூடிய பயணமானது, மாணவர்களுக்கு உணவு மற்றும் ஊட்டச்சத்து துறையில் ஆய்வு மேற்கொள்ளும் உத்வேகத்தை ஏற்படுத்தும் அளவில் இருந்தது.

இந்த பாராட்டு விழாவில் கல்லூரியின் முதல்வர் பாண்டியன், நிர்வாக அலுவலர் சரவணன் கலந்துகொண்டனர்.