4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் செவிலியர்கள் ஆர்ப்பாட்டம்

நான்கு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு எம்ஆர்பி செவிலியர் மேம்பாட்டு சங்கத்தினர் மாநிலம் தழுவிய பெருந்திரள் முறையீடு ஆர்ப்பாட்டம் மேற்கொண்டுள்ளனர்.

அதன்படி அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பும் இச்சங்கத்தினர் முறையீட்டு ஆர்ப்பாட்டம் மேற்கொள்கின்றனர். கோவையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகிலுள்ள பிஎஸ்.என்.எல் அலுவலகம் முன்பு தமிழ்நாடு எம்ஆர்பி செவிலியர் மேம்பாட்டு சங்கத்தின் மாவட்டத் தலைவர் ராஜலட்சுமி தலைமையில் சுமார் 20 க்கும் மேற்பட்டோர் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நீதிமன்ற உத்தரவின்படி எம்ஆர்பி செவிலியர்களுக்கு மாத வேலைக்கு சம ஊதியம் வழங்கிட வேண்டும், 7 வருடத்திற்கு மேலாக தொகுப்பூதிய முறையில் பணி செய்யும் செவிலியர்களை பணி நிரந்தரம் செய்திட வேண்டும், நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப நிரந்தர செவிலியர் பணியிடங்களை உருவாக்கிட வேண்டும், 2500 காலிப்பணியிடங்களையும் கொரோனா சிகிச்சை வழங்கிய செவிலியர்களை கொண்டு நிரப்பிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.