வாழைக்கான விலை முன்னறிவிப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் வாழைக்கான விலை முன்னறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பது: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில், வேளாண் மற்றும் ஊரக மேம்பாட்டு ஆய்வு மையத்தில் இயங்கி வரும் தமிழ்நாடு பாசன விவசாய மேம்பாட்டுத் திட்டத்தின் விலை முன்னறிவிப்புத் திட்டமானது, பூவன், கற்பூரவள்ளி மற்றும் நேந்திரன் வாழைக்கான விலை முன்னறிவிப்பை உருவாக்கியுள்ளது.

வேளாண் மற்றும் உழவர் நல அமைச்சகத்தின் இரண்டாவது முன்கூட்டிய அறிக்கையின் படி, 2021-22 ஆம் ஆண்டு இந்தியாவில், வாழை 9.59 இலட்சம் எக்டர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டு 351.31 இலட்சம் டன்கள் உற்பத்தியாகும் என்று அறிவித்துள்ளது.

இந்தியாவில் ஆந்திர பிரதேசம், மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம், குஜராத், தமிழ்நாடு மற்றும் கர்நாடகா ஆகியவை வாழை பயிரிடப்படும் முக்கிய மாநிலங்களாகும்.

தமிழகத்தில் 2021-22 ஆம் ஆண்டு, வாழை 1.01 இலட்சம் எக்டர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டு 39.39 இலட்சம் டன்கள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் பொதுவாக கோயம்புத்தூர், தேனி, திருச்சி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் வாழை அதிகளவில் பயிரிடப்படுகிறது. திருச்சி, திருநெல்வேலி, கடலூர், தேனி மற்றும் கோயம்புத்தூர் ஆகியவை முக்கிய வாழைக்கான சந்தையாக தமிழ்நாட்டில் உள்ளது. இவற்றில் அதிகமாக திருச்சி சந்தையிலிருந்து வாழை பிறபகுதிகளுக்கு அனுப்பபடுகிறது.

தற்போது, கோயம்புத்தூர் சந்தைக்கு லால்குடி, கரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மற்றும் முசிறி ஆகிய பகுதிகளிலிருந்தும், மேலும் தேனி பகுதிகளிலிருந்து வாழை திருச்சி சந்தைக்கும் அதிகமாக அனுப்பப்படுகிறது. வர்த்தக மூலங்களின்படி, பண்டிகை காலங்களில் வாழையின் தேவை அதிகரித்தாலும், திருச்சி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழையால் வாழை பெருமளவில் சேதமடைந்துள்ளதாக அறியப்படுகிறது.

இச்சூழலில், விலை முன்னறிவிப்பு குழு, கடந்த 19 ஆண்டுகளாக கோயம்புத்தூர் சந்தைகளில் நிலவிய பூவன், கற்பூரவள்ளி மற்றும் நேந்திரன் விலை மற்றும் சந்தை ஆய்வுகளையும் மேற்கொண்டது. ஆய்வின் முடிவில் அக்டோபர் – டிசம்பர், 2022 மாதங்களில் பூவன் வாழையின் சராசரி பண்ணை விலை கிலோவிற்கு ரூ. 22-24, கற்பூரவள்ளி பண்ணை விலை கிலோவிற்கு ரூ. 25-27 மற்றும் நேந்திரன் வாழையின் பண்ணை விலை கிலோவிற்கு ரூ.40-44 வரை இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

எனினும் வரும் காலங்களில் பருவநிலையை பொறுத்து விலையில் மாற்றங்கள் இருக்கும். எனவே விவசாயிகள் தகுந்த விற்பனை முடிவுகளை எடுக்குமாறு பரிந்துரைக்கபடுகின்றனர்.