கோவையில் நிலத்தடி நீர் மட்டம் 2 மீட்டர் வரை உயர வாய்ப்பு

தென்மேற்கு பருவமழையால் கோவையில் 2 மீட்டர் வரை நிலத்தடி நீர் மட்டம் உயர வாய்ப்புள்ளதாக பொதுப்பணித் துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

கோவை மாவட்டத்தில் பொதுப்பணித்துறையின் நீர்வள ஆதாரம் கட்டுப்பாட்டில் உள்ள 133 திறந்தவெளி கிணறுகள், 32 ஆழ்துளை கிணறுகள் மூலம் நிலத்தடி நீர் மட்டம் அளவிடப்படுகிறது.

மாதம்தோறும் நிலத்தடி நீர் மட்டம் அளவீடு செய்யப்பட்டு அறிக்கை அளிக்கப்படுகிறது. கோவையில் தென்மேற்கு பருவமழை எதிர்பார்த்ததை காட்டிலும் கூடுதலாக பெய்ததால் மாவட்டத்தில் நிலத்தடி நீர்மட்டமும் கணிசமாக உயர வாய்ப்புள்ளது.

இது குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறியதாவது: கோவையில் கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, ஆனைமலை, தொண்டாமுத்தூர், சூலூர் உள்பட 12 வட்டாரங்களிலும் பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கிணறுகளில் மாதம்தோறும் நிலத்தடி நீர்மட்டம் கணக்கிடப்படுகிறது.

மாவட்டத்தில் கடந்தாண்டு 0.10 முதல் 2.18 மீட்டர் வரை நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்திருந்தது. இதில் அதிகபட்சமாக சுல்தான்பேட்டையில் 2.18 மீட்டர், மதுக்கரையில் 2 மீட்டர், தொண்டாமுத்தூரில் 1.78 மீட்டர் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்திருந்தது.

இந்தாண்டும் நிலத்தடி நீர்மட்டம் 2 மீட்டர் வரை உயர வாய்ப்புள்ளது. மேலும் நிலத்தடி நீர் மட்டம் அளவீடு செய்வதற்கு மின்னணு கருவிகள் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நிலத்தடி நீர் மட்டத்தை துல்லியமாக எளிதாகவும் பெறமுடியும் என கூறினர்.