போக்குவரத்து நெரிசலை தவிர்க்க குரும்பபாளையம் முதல் சத்தியமங்கலம் வரை 4 வழிச்சாலை

போக்குவரத்து நெரிசலை தவிர்க்க கோவை குரும்பபாளையம் முதல் சத்தியமங்கலம் வரை ரூ.1,912 கோடி செலவில் 4 வழிச்சாலை அமைக்க தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் திட்டமிட்டுள்ளது. இதற்காக 315 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்படுகிறது.

கோவையில் இருந்து சத்தியமங்கலம் மற்றும் திம்பம் வழியாக கர்நாடக மாநிலத்துக்கு செல்லும் முக்கிய சாலையாக சத்திசாலை உள்ளது. இச்சாலையில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது. இதை தவிர்க்க சத்திசாலையை விரிவுபடுத்த திட்டமிடப்பட்டு உள்ளது.

இது குறித்து தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணைய அதிகாரி ஒருவர் கூறியதாவது: கோவையை அடுத்த கோவில்பாளையம் அருகே குரும்பபாளையம் முதல் சத்தியமங்கலம் வரை 90 கிலோ மீட்டர் தூரம் ரூ.1,912 கோடி செலவில் 4 வழிச்சாலையாக புறவழிச்சாலை அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது.

இந்த சாலையின் அகலம் 60 மீட்டர். மேலும் சர்வீஸ் சாலைகளும் அமைக்கப்படும். தேவைப்படும் இடங்களில் மேம்பாலங்களும் கட்டப்படும். இதில் திம்பம் வரை அமையும் 90 கிலோ மீட்டர் இடைவெளியில் 2 சுங்கச்சாவடிகள் அமைக்கப்படும். இந்த சாலையை விரிவாக்கம் செய்ய 315 ஏக்கர் நிலம் கையப்படுத்தப்பட வேண்டும்.

இதற்காக கோவை மற்றும் ஈரோடு மாவட்ட கலெக்டர்கள் நில கையகப்படுத்தி கொடுக்க வேண்டுகோள் விடுக்கப்பட உள்ளது. மேலும் இந்த சாலை அகலப்படுத்துவதற்கான திட்டவரைவு தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. அதே போல் காந்திபுரத்தில் இருந்து குரும்பபாளையம் வரை உள்ள சாலையை அகலப்படுத்த மாநில நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது என கூறினார்.

இந்த புறவழிச்சாலையில் 74 பஸ் நிறுத்தங்கள், 3 டிரக் பே உள்ளிட்ட வசதிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. மேலும் இச்சாலை கோவை மாவட்டத்தில் 26.7 கிலோ மீட்டரும், திருப்பூரில் 3.6 கிலோ மீட்டரும், ஈரோட்டில் 60 கிலோ மீட்டரும் அமைய உள்ளது. மேலும் தற்போது உள்ள கோவை-சத்தியமங்கலம் சாலையை விரிவாக்கம் செய்யவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளன.

அதன்படி கோவை சரவணம்பட்டியில் இருந்து புளியம்பட்டிவரை ரூ.73 கோடியில் சத்தி சாலை விரிவுபடுத்தப்பட உள்ளதாக நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
தேசிய நெடுஞ் சாலைத்துறை சார்பில் சத்தி சாலையை அகலப்படுத்துவது குறித்து திட்ட மதிப்பீடு அறிக்கை தயார் செய்யப்பட்டது. அதற்கு ஒப்புதல் அளித்து தேசிய நெடுஞ்சாலைத்துறை மத்திய அரசிடம் சமர்ப்பித்து நிதி உதவி பெற்று உள்ளது.

இது குறித்து தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:

சரவணம்பட்டியில் இருந்து அன்னூர் வழியாக புளியம்பட்டி வரை 32 கிலோ மீட்டர் தூரத்துக்கு ரூ.73 கோடி செலவில் இருபுறமும் சாலையை அகலப்படுத்த மத்திய நெடுஞ்சாலைத்துறை ஆணையத்தின் அனுமதி கிடைத்து உள்ளது. தற்போது இந்த சாலையின் அகலம் 7 மீட்டராக உள்ளது. அதை 10 மீட்டராக அதிகரிக்கப்பட உள்ளது. இடதுபக்கம் 1.5 மீட்டர் வலது பக்கம் 1.5 மீட்டர் என்று 3 மீட்டர் அகலப்படுத்தப்படும். போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படாமல் சாலையை அகலப்படுத்தும் பணி நடைபெறும். சாலையை அகலப்படுத்துவதன் மூலம் போக்குவரத்து நெரிசல் குறையும் எனக் கூறினார்.