எஸ்.என்.எஸ் ராஜலட்சுமி கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு தொடக்க விழா

டாக்டர் எஸ்.என்.எஸ் இராஜலட்சுமி கலை அறிவியல் கல்லூரியில் புதன்கிழமை அன்று முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான தொடக்க விழா நடைபெற்றது.

கல்லூரியின் தாளாளர் மருத்துவர் எஸ்.ராஜலட்சுமி குத்துவிளக்கினை ஏற்றி விழாவினை தொடங்கி வைத்தார். கல்லூரி முதல்வர் அனிதா வரவேற்புரை வழங்கினார்.

விஜய் டிவி நீயா? நானா? புகழ் கோபிநாத் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசுகையில்: மாணவர்கள் தங்களது எதிர்காலத்தை மன உறுதியுடன் சந்திக்க வேண்டும். எதிர்காலத்தை கட்டமைக்கும் மனப்பக்குவத்தையும், தோல்விகளைக் கண்டு அஞ்சாமல் இருக்கும் பண்புகளையும் மாணவர்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும்.

மேலும் தான் விரும்பிய பணியை தேர்வு செய்து மகிழ்வோடும், பொறுப்போடும் வாழப் பழகிக் கொள்ள வேண்டும். செய்யும் பணியை நேசிப்பது, மகிழ்ச்சியாக வாழ்வதே சிறந்த வாழ்வு என்பதை மாணவர்கள் உணர்தல் வேண்டும். பிறரைப் போல் வாழாமல் தனித்தன்மையோடு மாணவர்கள் திகழ்தல் வேண்டும் என்று பேசி மாணவர்களை ஊக்கப்படுத்தினார்.

எஸ்.என்.எஸ் கல்வி நிறுவனங்களின் தலைவர் எஸ்.என்.சுப்ரமணியன் தலைமை உரை வழங்க எஸ்.என்.எஸ் கல்வி நிறுவனங்களின் தொழில்நுட்ப இயக்குனர் மற்றும் செயலர் நளின் விமல் குமார் வாழ்த்துரை வழங்கினார்.

எஸ்.என்.எஸ் நிறுவனங்களின் சி.இ.ஓ டேனியல், துணை முதல்வர்கள் நரேஷ் குமார் மற்றும் அபிராமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். புல முதன்மையர்கள், இயக்குநர்கள், துறைத்தலைவர்கள் பேராசிரியர்கள் விழாவில் பங்கேற்றனர்.