தமிழ்நாடு வேளாண் பல்கலை சார்பில் பார்த்தீனிய களை செடி விழிப்புணர்வு

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் சார்பாக மனிதர்களுக்கும், கால்நடைகளுக்கும் மற்றும் வேளாண்மைக்கும் தீங்கு ஏற்படுத்தும் பார்த்தீனியம் நச்சு செடி குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

மத்திய அரசானது ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் 16 முதல் 22 வரை பார்த்தீனியம் விழிப்புணர்வு வாரமாக அறிவித்துள்ளது. அதன்படி, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் உழவியல் துறையில் அகில இந்திய களை ஆராய்ச்சி திட்டத்தின் கீழ் ஒவ்வொரு வருடமும் பார்த்தீனியம் விழிப்புணர்வு வாரம் அனுசரிக்கப்பட்டு வருகின்றது.

பார்த்தீனியம் ஒரு நச்சுக்களை. இக்களைச்செடியானது உலகம் முழுவதுமாக பரவி பலவிதமான தீங்கினை மனிதர்களுக்கும், கால்நடைகளுக்கும் மற்றும் வேளாண்மை சாகுபடிக்கும் ஏற்படுத்துகின்றது.

இக்களைச்செடியானது அதிக அளவு விதை உற்பத்தி செய்யக்கூடியதாகும். ஒவ்வொரு செடியும் சுமார் 10,000 முதல் 25,000 விதைகளை உருவாக்குவதால் ஒரு சதுர மீட்டரில் 1,54,000 பார்த்தீனிய விதைகள் மண்ணில் காணப்படுகின்றன. மேலும், இவ்விதைகள் எளிதாக காற்றில் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு இடம் பெயர்வதால் இதனை கட்டுப்படுத்துவது மிகவும் சவாலாக உள்ளது.

இந்த வருடம் பார்த்தீனிய விழிப்புணர்வு வாரத்தின் முதல் நிகழ்ச்சியாக, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள அரசினர் நடுநிலைப் பள்ளி மாணாக்கர்களுக்கு பார்த்தீனியம் பற்றிய கட்டுரைப் போட்டிகளை நடத்தி பரிசுகள் வழங்கப்பட்டது. இளங்கலை மற்றும் முதுகலை மாணவர்களுக்கு பார்த்தீனியச்செடி, அதன் தீமைகள் மற்றும் மேலாண்மை முறைகள் பற்றிய உரையை உழவியல் இணைப் பேராசிரியர் முரளி அர்த்தனாரி எடுத்துரைத்தார்.

அடுத்த நிகழ்ச்சியாக, இளங்கலை மாணவர்களுக்கு பார்த்தீனியம் பற்றிய விநாடி வினா போட்டிகள் நடத்தி வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

இதனைத் தொடர்ந்து உழவியல் துறை தலைவர் பன்னீர்செல்வம் மற்றும் இணைப்பேராசிரியர் முரளி அர்த்தனாரி பல்கலைக்கழகத்தில் உள்ள பண்ணை தொழிலாளர்கள் ஆகியோருடன் சேர்ந்து வயல்வெளிகளில் பார்த்தீனியச் செடிகளை அப்புறப்படுத்தினர்.

மேலும் பார்த்தீனிய விழிப்புணர்வு நிகழ்ச்சியானது நரசீபுரத்தில் உள்ள ஸ்ரீ இரங்கநாதர் பொறியியல் கல்லூரியில் நடத்தப்பட்டது.