100% அஞ்சல்தலை வைப்புக் கணக்கு: சச்சிதானந்த ஜோதி நிகேதன் பன்னாட்டுப் பள்ளி சாதனை

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அடுத்து கல்லாறு பகுதியில் அமைந்துள்ள சச்சிதானந்த ஜோதி நிகேதன் பன்னாட்டுப் பள்ளிதான் இந்தியாவிலேயே “100% அஞ்சல்தலை வைப்புக் கணக்கு” வைத்திருக்கும் ஒரே பள்ளி என்ற பெருமையைப் பெற்றுள்ளது. இது தொடர்பாக பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பள்ளிச் செயலர் சிந்தனைக் கவிஞர் கவிதாசன், மாணவ மாணவியர் 799 பேரின் 2022-2023 கல்வியாண்டிற்கான அஞ்சல்தலை வைப்புக் கணக்கிற்குரிய தொகையான ஒரு லட்சத்து 59 ஆயிரத்து 800 ரூபாய்க்கான (ரூபாய் 1,59,800) கேட்புக் காசோலையினை, திருப்பூர் கோட்ட அஞ்சல்துறைக் கண்காணிப்பாளர் விஜயதனசேகரிடம் அளித்தார். உடன் மேட்டுப்பாளையம் அஞ்சல் அலுவலகத் தலைமை அலுவலர் நாகஜோதி, பள்ளியின் கல்வி ஆலோசகர் கணேசன், பள்ளி முதல்வர் உமாமகேஸ்வரி, துணை முதல்வர் சக்திவேல், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.